/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுமைக்கு மாறும் வனம்: நீங்கியது வனத்தீ அபாயம்
/
பசுமைக்கு மாறும் வனம்: நீங்கியது வனத்தீ அபாயம்
ADDED : மே 17, 2024 12:19 AM

கூடலுார்:முதுமலையில் தொடரும் கோடை மழையால் வனப்பகுதி பசுமைக்கு மாறி, வனத்தீ அபாயமும் நீங்கி உள்ளது.
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி பகுதிகளில் நடப்பாண்டு, கோடை மழை ஏமாற்றியதால், வனம் பசுமை இழந்து வறட்சிக்கு மாறியது. நீர்நிலைகளையும் நீர் வரத்து வெகுவாக குறைந்தது. வனத்தீ ஏற்பட்டு வனம் பாதிக்கப்பட்டது. வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில், கடும் வறட்சியான பகுதிகளில் வனவிலங்குகள் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய, வன ஊழியர்கள் வாகனங்களில் தண்ணீர் எடுத்துச் சென்று தொட்டிகளில் ஊற்றி வந்தனர். தொடர்ந்து, கோடை மழை ஏமாற்றியதால் வறட்சியின் தாக்கம் மேலும், அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், சில நாட்களாக கோடை மழை பெய்து வருவதால், மிதமான காலநிலை ஏற்பட்டுள்ளதுடன், வறண்ட நீர் நிலைகளில் நீர்வரத்து துவங்கியுள்ளது.
வனப் பகுதி வறட்சி நீங்கி, பசுமைக்கு மாறி வருகிறது. இதனால் தாவர உண்ணிகளுக்கு உணவு தட்டுப்பாடு நீங்கி வருகிறது. வனத்தீ அபாயமும் நீங்கி உள்ளதால், வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்
வனத்துறையினர் கூறுகையில், 'நடப்பாண்டு துவக்கம் முதல் கோடை மழை ஏமாற்றுவதால், வனத்தில் வறட்சியின் தாக்கம் அதிகமாக இருந்தது.
'வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், வனத்தீ அபாயமும் தொடர்ந்தது. தற்போது பெய்து வரும் மழையினால் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது,' என்றனர்.

