/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோடையில் அனுமதியின்றி வனத்துக்குள் செல்ல தடை; பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
/
கோடையில் அனுமதியின்றி வனத்துக்குள் செல்ல தடை; பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
கோடையில் அனுமதியின்றி வனத்துக்குள் செல்ல தடை; பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
கோடையில் அனுமதியின்றி வனத்துக்குள் செல்ல தடை; பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
ADDED : டிச 27, 2024 07:34 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வன தீ தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டம் குறித்து களப்பணியாளர்களுக்கான பயிற்சி நடந்தது. மாவட்ட வன அலுவலர் கலாநிதி முன்னிலை வகித்தார். கலெக்டர் உமா தலைமை வகித்து, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: தீ தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தில், நாமக்கல் வனக்கோட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் போது, விபத்தில் சிக்கிக் கொண்டால் எவ்வாறு முதலுதவி செய்வது குறித்து ஆலோசனை, செயல் விளக்கம் வழங்கப்படுகிறது. இயற்கையை பாதுகாப்பதில் காடு, மரங்களின் முக்கியத்துவம், வன தீ சம்பவங்களின் தாக்கம், வன தீயை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை, வன தீ விபத்துகளின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கை, தீயை அணைக்கும் பணியில் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, போலீஸ் துறை மற்றும் பிற துறைகளின் ஒருங்கிணைப்பு, வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் பொதுமக்கள், கிராம மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இந்த பயிற்சியின் நோக்கமாகும்.
மாவட்ட வன தீ கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அனைத்து வனத்துறை அலுவலர்களுக்கும் வயர்லெஸ் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் தொடர்ந்து ரோந்து பணி மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் கடந்தாண்டு வரை ஏற்பட்ட வன தீ விபத்துகளில், 95 சதவீத விபத்துகள் ஒரே நாளில் அணைக்கப்பட்டுள்ளன. கோடைகாலம் துவங்க உள்ளதால், டிச., முதல் ஜூன் வரை பொதுமக்கள் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. மேலும், எளிதில் தீப்பற்றக்கூடிய தீப்பெட்டி, பீடி, சிகரெட், பிளாஸ்டிக் பைகள் எந்த பொருளையும் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் சென்று வனத்தீயை ஏற்படுத்துவோர் மீது, தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வன தீ குறித்த தகவல்களை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்கள், 0427-2900428 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
டி.ஆர்.ஓ., சுமன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) செல்வராசு, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

