/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
5 கிராமங்களில் 'மரகத பூஞ்சோலை' அமைக்கும் பணி மும்முரம்
/
5 கிராமங்களில் 'மரகத பூஞ்சோலை' அமைக்கும் பணி மும்முரம்
5 கிராமங்களில் 'மரகத பூஞ்சோலை' அமைக்கும் பணி மும்முரம்
5 கிராமங்களில் 'மரகத பூஞ்சோலை' அமைக்கும் பணி மும்முரம்
ADDED : மே 25, 2024 02:28 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், தலா, 25 லட்சம் வீதம், 1.25 கோடி ரூபாய் மதிப்பில், 5 கிராமங்களில், மரகத பூஞ்சோலை அமைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணி விரைவில் முடிந்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கிராம அளவில் ஒரு ஹெக்டேர் பரப்பளவில், வனம் சார்ந்த பலன்கள் கிடைக்கும் வகையில் அமைக்கப்படும் சிறுவனமே, 'மரகத பூஞ்சோலை' எனப்படும். இந்த திட்டத்தின் கீழ், 100 கிராமங்களில், 'மரகத பூஞ்சோலைகள்' அமைக்கப்படும். இந்த திட்டமானது, 25 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும். இதற்காக, ஒரு கிராமத்திற்கு, 25 லட்சம் ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்ய தமிழக வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு வனச்சரகத்துக்கு உட்பட்டு ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு ஒரு ஹெக்டேர் அதாவது, 2.47 ஏக்கர் நிலத்தில் பூஞ்சோலை உருவாக்கப்படும். அங்கு கனி வகைகள் கொண்ட மரங்கள், நிழல் தரும் மரங்கள், மலர் தரும் செடிகள் ஆகியவற்றை நட்டு வளர்த்து, வனத்துறை சார்பில் பூங்கா அமைக்கப்படும்.
நாமக்கல் வனக்கோட்டத்தில், தலா, 25 லட்சம் ரூபாய் மதிப்பில், நாமக்கல் - மோகனுார் சாலை வகுரம்பட்டி, கொல்லிமலை அரியூர்நாடு, ராசிபுரம் தாலுகா, பட்டணம், குருக்கபுரம், காமராஜர் நகர் என, ஐந்து கிராமங்களில், 'மரகத பூஞ்சோலை' அமைக்கப்படுகிறது. மேலும், பசுமை தமிழகம் திட்டம், தமிழக பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ், 650 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.
நாமக்கல் - மோகனுார் சாலை, ரேஞ்சர் அலுவலகம் அருகில், 'மரகத பூஞ்சோலை' அமைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கனி தரும் மரங்கள், நிழல் தரும் மரங்கள், பூச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. 650 மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது. 'இப்பணிகள் அனைத்தும், இரண்டு வாரத்துக்குள் முடிக்கப்பட்டுவிடும். அதையடுத்து, அரசு உத்தரவின்படி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்' என, மாவட்ட வனத்துறையினர் தெரிவித்தனர்.

