/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கடும் வெயில் நேரத்தில் சூரிய ஒளியின் நேரடி தாக்குதல் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள கலெக்டர் அறிவுரை
/
கடும் வெயில் நேரத்தில் சூரிய ஒளியின் நேரடி தாக்குதல் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள கலெக்டர் அறிவுரை
கடும் வெயில் நேரத்தில் சூரிய ஒளியின் நேரடி தாக்குதல் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள கலெக்டர் அறிவுரை
கடும் வெயில் நேரத்தில் சூரிய ஒளியின் நேரடி தாக்குதல் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள கலெக்டர் அறிவுரை
ADDED : மார் 28, 2024 02:32 AM
நாமக்கல், 'கடும் வெயில் நேரத்தில், சூரிய ஒளியின் நேரடி தாக்குதல் ஏற்படாதபடி பணிகளை மேற்கொள்ள திட்டமிட வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் உமா எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து, அதிக வெப்பநிலை நிலவக்கூடும். அதனால், கவனமாக இருப்பதுடன், முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அதன்படி, பருத்தியால் தயாரிக்கப்பட்ட, எடை குறைவான, தளர்வான மற்றும் வெளிர் நிற ஆடைகளை உடுத்த வேண்டும். வெளியில் செல்லும்போது தலைக்கு தொப்பி அல்லது குடை, பாதுகாப்பான குளிர் கண்ணாடி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். பயணங்களின் போது குடிநீர் எடுத்துச்செல்ல வேண்டும். உடல் வெப்பத்தை தணிக்க, அவ்வப்போது தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, கஞ்சி, கூழ், பழச்சாறு, இளநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ்., கலவை ஆகியவற்றை அருந்த வேண்டும்.
குழந்தைகள், கருவுற்ற பெண்கள், முதியோர் மற்றும் உடல்நலம் குன்றியவர்களை, வெப்பதாக்கம் இல்லாத பகுதிகளில் வைத்து பராமரிக்க வேண்டும். வெளிப்புறத்தில் பணியாற்றுபவர்கள் ஈரமான உடைகளை பயன்படுத்த வேண்டும். குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்க வேண்டும். கடும் வெயில் நேரத்தில் சூரிய ஒளியின் நேரடி தாக்குதல் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள திட்டமிட வேண்டும்.
கால்நடைகளை நிழலில் வைத்து பராமரிக்க வேண்டும். அவற்றிற்கு தேவையான அளவு குடிநீரை வழங்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில், அனைவருக்கும் குளிர்ந்த குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டப்பணியில் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்களுக்கு தேவையான அளவிற்கு குடிநீர் வைத்துக்கொள்ள வேண்டும்.
வெயில் பாதிப்பால் அசதி, தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மற்றவர் உதவியுடன் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மேலும், வெயில் நேரத்தில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். வெயிலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு அருகில் குழந்தைகளையும், செல்ல பிராணிகளையும் செல்லவிடக்கூடாது. அடர்வண்ணம் கொண்ட (குறிப்பாக கருமை வண்ண) ஆடைகள் மற்றும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. கடும் வெயிலில் வெளியே செல்லக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

