ADDED : மார் 04, 2026 06:22 AM

மதுரை: எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில் பயணப்படி, இரவுப்பணி அலவன்சு உள்ளிட்ட நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கான அலவன்சுகளை வழங்க வலியுறுத்தி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ரயில்வே கோட்ட அலுவலக வளாகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓடும் தொழிலாளர்கள் பிரிவு செயலாளர் அழகுராஜா தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் ரபீக், உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் முன்னிலை வகித்தனர்.
மத்திய அரசு நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி, தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பயணப்படி, இரவுப்பணி அலவன்சுகளை நிறுத்தி வைத்துள்ளது.
ஆள் பற்றாக்குறை, வேலைப்பளு போன்றவற்றால் ரயில்வே ஊழியர்கள் பாதிக்கின்றனர். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கிலோ மீட்டர் அலவன்சு உள்ளிட்ட அனைத்து அலவன்சுகளையும் போர்க்கால அடிப்படையில் உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மத்திய சங்க துணைத் தலைவர் சுப்பையா, ஓடும் தொழிலாளர் பிரிவு தலைவர் ரவிசங்கர், உதவி கோட்ட செயலாளர்கள் சீதாராமன், சபரி வாசன், செந்தில், ஜோதி ராஜா, கிளைச் செயலாளர்கள் திலக், அருண், சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

