/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு மருத்துவமனைகளில் முதியோர் நல மருத்துவ மையம், வார்டு தனியாக தேவை
/
அரசு மருத்துவமனைகளில் முதியோர் நல மருத்துவ மையம், வார்டு தனியாக தேவை
அரசு மருத்துவமனைகளில் முதியோர் நல மருத்துவ மையம், வார்டு தனியாக தேவை
அரசு மருத்துவமனைகளில் முதியோர் நல மருத்துவ மையம், வார்டு தனியாக தேவை
ADDED : ஜூலை 30, 2025 12:19 AM
மதுரை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முதியோர் நல மருத்துவ மையம் அல்லது வார்டை (ஜீரியாட்ரிக் கேர்) தனியாக அமைத்து முதியோர்களுக்கு தனி சிகிச்சை அளிக்க வேண்டும்.
மத்திய அரசு சார்பில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அமைக்கப்பட்டது. இரண்டாவதாக சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் 8 ஏக்கர் வளாகத்தில் தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தை 2024 பிப். 25 ல் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி துவங்கி வைத்தார். 200 படுக்கைகளுடன் கூடிய இந்த மருத்துவமனையில் சிறுநீரகவியல், இதயவியல், நரம்பியல், குடல், இரைப்பை பிரிவு என பல்வேறு பிரிவுகளுடன் அறுவை சிகிச்சை பிரிவும் தனியாக செயல்படுகிறது.
முதியோர்கள் பொழுதை கழிக்கும் வகையில் நுாலகம், செஸ், கேரம் விளையாட்டு கருவிகள், யோகா செய்வதற்கான வசதிகள் உள்ளன. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை எண் இருந்தால் போதும், ஏழைகள் இலவசமாக பயன்படுத்தலாம்.
பணமிருந்தும் தனிமையில் தவிக்கும் முதியோர்களுக்கு கட்டண அறை தனியாக இருப்பதால் இங்கு நிம்மதியாக சிகிச்சை பெறலாம்.
தனி மையம் ஏன் தேவை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு நிதியுதவியின் கீழ் இதுபோன்ற கட்டமைப்புடன் தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அமைப்பது இயலாத விஷயம். தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லுாரிகளின் மருத்துவமனைகள், இதுதவிர மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
இவற்றில் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் ஒதுக்கி முதியோர் நல வார்டு என்ற பிரிவை தனியாக துவங்க வேண்டும். ஒருசில மருத்துவமனைகளில் இந்த வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் எல்லா மாவட்டத்திலும் இல்லை.
அறுபது வயதை கடந்தவர்கள் பெரும்பாலும் சர்க்கரை நோய், கண் பிரச்னை, சிறுநீரக பிரச்னையால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் மற்ற நோயாளிகளுடன் ஒவ்வொரு வார்டிலும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பது சிரமம். அதேபோல மருந்துகள் வாங்குவதற்கும் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். எனவே தரைத்தளத்தில் உள்ள வார்டு ஒன்றை முதியோர் நல வார்டாக மாற்றி அங்கேயே சிகிச்சையும் மருந்துகளும் அளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும்.

