ADDED : ஜன 25, 2026 05:10 AM
மதுரை: மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்திற்கு தேசிய அங்கீகார வாரியத்தின் (என்.ஏ.பி.எல்.,) தேசிய தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
அதன் அலுவலர் சிவகாமி கூறியதாவது: மதுரையில் பயிரிடப்படும் நெல், பயறு வகைகள், எள், நிலக்கடலை, பருத்தி, மக்காச்சோளம், காய்கறிகளின் விதைகள், மதுரை விதைப்பரிசோதனை நிலையத்தில் பரிசோதிக்கப்படுகிறது. தமிழ்நாடு விதைசான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புதுறை சார்பில் நிலையம் செயல்படுகிறது. விதைகளின் முளைப்புத்திறன், புறத்துாய்மை, ஈரப்பதம் பரிசோதிக்கப்பட்டு விதைகளின் தரம் உறுதிசெய்யப்படுகிறது.
நடப்பாண்டில் 3059 விதை மாதிரிகளை பரிசோதித்ததில் 191 மாதிரிகள் தரமற்றவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆய்வகச்சோதனை மற்றும் அளவு திருத்த ஆய்வகங்களுக்கான என்.ஏ.பி.எல்., தரச்சான்று பெற்றுள்ளோம். இதன் மூலம் இங்கு பரிசோதனை செய்யப்படும் விதைகளுக்கு உலகளவில் விற்பனை பிரதிநிதித்துவம் கிடைக்கிறது. எனவே விதை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் தங்களிடமுள்ள விதைகளை விதைப்பரிசோதனை கட்டணம் ரூ.80 செலுத்தி விதை தரத்தினை அறியலாம். விவசாயிகளும் தாங்கள் வாங்கி விதைகளை பரிசோதனை செய்த பின் சாகுபடி செய்தால் சரியான மகசூலைப் பெறலாம் என்றார். வேளாண் அலுவலர்கள் ராமலட்சுமி, கமலாராணி உடனிருந்தனர்.

