/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குடும்ப பிரச்னையில் ஒப்படைத்த நகைகள் அடகு
/
குடும்ப பிரச்னையில் ஒப்படைத்த நகைகள் அடகு
ADDED : மே 25, 2024 02:18 AM
திருமங்கலம்:மதுரை மாவட்டம் திருமங்கலம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கீதா. இவரது கணவர் சரவணன் திருநகர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார்.
திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜேஷ், 33, பெங்களூரு ஐ.டி., நிறுவன ஊழியர். இவரது மனைவி அபிநயா, 30. சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இந்தப் பிரச்னையில் மகளிர் போலீசில் இரு தரப்பினரும் தனித்தனியாக புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் கீதா விசாரித்து வந்தார்.
இந்நிலையில், திருமணத்தின்போது தன் பெற்றோர் வீட்டில் அணிவித்த நகைகளை ராஜேஷிடம் இருந்து வாங்கித் தருமாறு அபிநயா இன்ஸ்பெக்டரிடம் கூறினார். இதையடுத்து, 95 சவரன் நகைகளை இன்ஸ்பெக்டர் கீதாவிடம் ஒரு மாதத்துக்கு முன் ராஜேஷ் ஒப்படைத்தார். ஆனால் அந்த நகைகளை அபிநயாவிடம் கொடுக்காமல் இன்ஸ்பெக்டர் காலம் தாழ்த்தி வந்தார். இதுகுறித்து ராஜேஷ் டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். டி.எஸ்.பி., விசாரணையில் நகைகளை இன்ஸ்பெக்டர் தனியார் நிதி நிறுவனத்தில் 43 லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்திருந்தது தெரிந்தது. மேலும் அந்த நகைகளை திருப்பி தர இன்ஸ்பெக்டர் கீதா அவகாசமும் கேட்டார்.
சில நாட்களுக்கு முன், அடகு வைத்த நகைகளில் சிலவற்றை மட்டும் இன்ஸ்பெக்டர் திருப்பிக் கொடுத்தார். மீதமுள்ள 70 சவரனுக்கும் மேற்பட்ட நகைகளை வழங்காமல், இன்ஸ்பெக்டர் காலம் தாழ்த்தினார். இதுகுறித்து விசாரித்த டி.ஐ.ஜி., ரம்யபாரதி, இன்ஸ்பெக்டர் கீதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

