
தெருவிளக்கு தேவை
மதுரை செல்லுார் - குலமங்கலம் இணைப்பு ரோடு மீனாம்பாள்புரம் ஆலமரம் அருகே பல நாட்களாக தெருவிளக்கு எரிவதில்லை. கும்மிருட்டில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அபுபக்கர், மீனாம்பாள்புரம்.
இடியும் நிலையில் தொட்டி
செல்லம்பட்டி ஒன்றியம் பூதிபுரம் மேற்கு காலனியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இடியும் நிலையில் உள்ளது. பலமுறை ஊராட்சி தலைவரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. உயிர்பலி ஏற்படும் முன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பிரபாத், உசிலம்பட்டி.
நாய்கள் தொல்லை
மதுரை கான்பாளையத்தில் பசுமாடுகள் ரோட்டில் உலா வருவது, தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. வெறி நாய்களால் பொதுமக்கள் ரோட்டில் செல்ல அஞ்சுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பிரேம்நாத், கான்பாளையம்.
மின்னழுத்த மன அழுத்தம்
மேலபனங்காடி, மீனாட்சி கார்டன் பகுதியில் மின்னழுத்தப் பிரச்னை ஏற்படுகிறது. குறைந்த மின்னழுத்ததால் ஏசி, மோட்டார் பம்பு, டிவி, பிரிட்ஜ் சாதனங்கள் பழுதடைகின்றன. இரவில் குழந்தைகள், பெரியவர்கள் துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் போதுமானமின்மாற்றிகளை அமைத்து தீர்வு காண வேண்டும்.
- சிவபாலன், மேலபனங்காடி.
எண்ணெய் பற்றாக்குறை
சோழவந்தான் அருகே தென்கரை பகுதி ரேஷன் கடையில் சமையல் எண்ணெய் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையே வழங்கப்படுகிறது. கள்ளச் சந்தையில் விற்கிறார்களா எனத் தெரியவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- ஆதித்யன், தென்கரை.
குடிநீர் தட்டுப்பாடு
விராட்டிப்பத்து காமாட்சி அம்மன் கோயில் தெருக்களில் 15 நாட்களாக குடிநீர் வரவில்லை. ஏற்கனவே குடிநீருடன் கலந்து வரும் கழிவுநீரையே மக்கள் காய்ச்சிப் பருகுகின்றனர். புகார் தெரிவிக்க கவுன்சிலரை ஒருமாதமாக தொடர்புகொள்ள முடியவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காமராஜ், விராட்டிபத்து.
மின் விநியோகம் சரியில்லை
கோச்சடை பகுதியில் ஒரு வாரமாக மின் விநியோகம் சரியில்லை. இரவு நேரங்களில் மின்தடையால் சிரமப்படுகிறோம். தமிழக அரசின் மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் ரோடு மறியல் நடத்தும்முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆறுமுகம், கோச்சடை.

