ADDED : பிப் 03, 2024 03:36 AM
100 மரக்கன்றுகள் நடல்
காவேரிப்பட்டணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு மார்ச், 1ல் பிறந்தநாள் வருகிறது. இதை கொண்டாடும் வகையில் காவேரிப்பட்டணம் அடுத்த போத்தாபுரத்தில், தி.மு.க., சுற்றுச்சூழல் அணி சார்பில், 100 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய செயலர் தேங்காய் சுப்பிரமணி தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் மதியழகன் எம்.எல்.ஏ., போத்தாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பின், போத்தாபுரத்தில் முதல்வர் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட தி.மு.க., கம்பத்தில் கொடியேற்றினார்.
மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முருகன், மாவட்ட துணை செயலர் கோவிந்தராஜ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை தலைவர் செந்தில்குமார், காவேரிப்பட்டணம் நகர செயலர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர் வனக்கோட்டத்தில்50 ஆண்டுக்கு பின் புலிகள்
ஓசூர்: சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் செயலர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அறிக்கை:
ஓசூர் வனக்கோட்டம், ஜவளகிரி காப்புக்காடுகள் பகுதியில், 50 ஆண்டுக்கு பின், இரு புலிகள் தென்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜவளகிரி காப்புக்காடுகள் சரக பகுதியில், கடந்த ஜனவரியில் பொருத்தப்பட்ட கேமராவில், 4 முதல் 5 வயதுள்ள மற்றும் 8 முதல் 9 வயதுள்ள இரு புலிகளின் புகைப்படம் பதிவாகி இருப்பதாக, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயினி தெரிவித்துள்ளதாக, தலைமை வன உயிரினக்காப்பாளர் சீனிவாஸ் ஆர்.ரெட்டி தகவல் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட, காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தை ஒட்டி அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட இந்த வனப்பகுதியில் புலிகளின் நடமாட்டம் காணப்படுவது, பன்னார் கட்டா தேசிய பூங்கா மற்றும் அதன் அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில், புலிகள் வசிக்க உகந்த வனப்பகுதியாக மாறுவதற்கு, தமிழக அரசு வன உயிரினங்களை பாதுகாக்க எடுத்து வரும் வெற்றிகரமான நடவடிக்கைகளே காரணம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

