/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புதிய ரகங்கள் சாகுபடி இல்லாததால் காதலர் தினத்திற்கு 30 லட்சம் ரோஜா மட்டுமே ஏற்றுமதி
/
புதிய ரகங்கள் சாகுபடி இல்லாததால் காதலர் தினத்திற்கு 30 லட்சம் ரோஜா மட்டுமே ஏற்றுமதி
புதிய ரகங்கள் சாகுபடி இல்லாததால் காதலர் தினத்திற்கு 30 லட்சம் ரோஜா மட்டுமே ஏற்றுமதி
புதிய ரகங்கள் சாகுபடி இல்லாததால் காதலர் தினத்திற்கு 30 லட்சம் ரோஜா மட்டுமே ஏற்றுமதி
ADDED : பிப் 13, 2024 12:24 PM
ஓசூர்; ஓசூரில் புதிய ரகங்கள் சாகுபடி இல்லாததால், காதலர் தினத்திற்கு, 30 லட்சம் அளவிற்கு மட்டுமே ரோஜா ஏற்றுமதி நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்றுவட்டாரத்தில், 2,500 ஏக்கருக்கு மேல் பசுமை குடில்கள் அமைத்து, தாஜ்மகால், பர்ஸ்ட்ரெட் உட்பட, 14 க்கும் மேற்பட்ட ரோஜாக்கள் சாகுபடியாகின்றன. உலகம் முழுவதும் நாளை, 'காதலர் தினம்' கொண்டாடப்பட உள்ள நிலையில், ஓசூரிலிருந்து வெளிநாடுகளுக்கு கடந்த, 2 ம் தேதி ரோஜா ஏற்றுமதி துவங்கி கடந்த, 10 வரை நடந்தது. சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், வங்காளதேசம் உட்பட பல்வேறு நாடுகளுக்கு ரோஜாக்கள் ஏற்றுமதியாகின. விவசாயிகளிடம் ஒரு ரோஜா, 14 முதல், 18 ரூபாய் வரை வாங்கப்பட்டன. ஏற்றுமதி, 50 லட்சம் அளவிற்கு நடக்கும் என எதிர்பார்த்த நிலையில், கடந்தாண்டை போலவே குறைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து, தேசிய தோட்டக்கலை வாரிய இயக்குனர் பாலசிவப்பிரசாத் கூறியதாவது: காதலர் தினத்தையொட்டி, கென்யா, எத்தோப்பியா மற்றும் சீன மலர்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி உள்ளன. ஓசூர் இடத்தை அந்நாட்டு மலர்கள் பிடித்ததால், 50 லட்சம் ரோஜா ஏற்றுமதியாக வேண்டிய இடத்தில், 30 லட்சம் அளவிற்கு மட்டுமே ஏற்றுமதியானது. விவசாயிகள், 15 ஆண்டுக்கு முந்தைய ரோஜா ரகங்களை மட்டுமே தொடர்ந்து சாகுபடி செய்கின்றனர். ஏற்றுமதி குறைந்ததற்கு இது முக்கிய காரணம். ஆனால், சீனா, கென்யா, எத்தோப்பியா போன்ற நாடுகள், சந்தைக்கு கொண்டு வரும் புது, புது ரோஜா ரகங்களை பல நாடுகள் விரும்பி வாங்குகின்றன. கென்யா, எத்தோப்பியா போன்ற நாடுகளில், 12 மணி நேரம் சூரிய வெளிச்சம் கிடைக்கிறது. உற்பத்தி செலவு குறைவு என்பதால் அதிக சாகுபடி நடக்கிறது.
ஓசூரை பொருத்தவரை, உற்பத்தி செலவு அதிகம். ஏக்கருக்கு பயிர் பாதுகாப்பு, ஊட்டச்சத்து செலவு மட்டும் ஆண்டுக்கு, 8 லட்சம் ரூபாய் வரை ஆகிறது. மேலும், 6 லட்சம் ரூபாய் வேலையாட்கள் கூலி; சிப்பம் கட்டுதல் மற்றும் விற்பனைக்கான போக்குவரத்து செலவு, 2 லட்சம்; பசுமை குடில்களின் தேய்மானம், 4 லட்சம்; செடி, நடவுகளுக்கான செலவீனம், 1 லட்சம் என ஆண்டுக்கு, 21 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஏற்றுமதியை குறி வைத்து தான் செலவு செய்கிறோம். ஆனால், ஏற்றுமதி பாதிப்பால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

