/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிப்பு! 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்
/
கள்ளக்குறிச்சி தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிப்பு! 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்
கள்ளக்குறிச்சி தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிப்பு! 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்
கள்ளக்குறிச்சி தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிப்பு! 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்
ADDED : மார் 27, 2024 11:11 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க.,- பா.ம.க., - நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பிரதான கட்சியினர் உட்பட மொத்தம் 37 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் நேற்று முதல் தங்களது தேர்தல் பிரசாரத்தை துவக்கினர்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி உதயமான பின்பு, இதுவரை நடந்த மூன்று தேர்தல்களில் தி.மு.க., இரு முறையும், அ.தி.மு.க., ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இதில் தி.மு.க., மூன்று முறையும் நேரடியாக போட்டியிட்டது. அ.தி.மு.க.,வில் இரு முறை கூட்டணி கட்சிக்கும் ஒரு முறை நேரடியாக போட்டியிட்டது. அதில் வெற்றியும் கண்டது.
தற்போது நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் தி.மு.க., வேட்பாளராக தியாகதுருகம் நகர செயலாளர் மலையரசன், அ.தி.மு.க., வேட்பாளராக மாவட்ட செயலாளர் குமரகுரு ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதற்கிடையே பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளராக மாநில துணை தலைவர் தேவதாஸ், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கடந்த 20ம் தேதி மனு தாக்கல் துவங்கிய நிலையில், தி.மு.க., - அ.தி.மு.க.,- பா.ம.க., - நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்கள், இவர்களுக்கு மாற்று வேட்பாளர்கள், சுயேட்சைகள் என மொத்தம் 37 பேரில் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. கடைசி நாளான நேற்று பா.ம.க., உட்பட 24 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டது.
தி.மு.க., தொடர் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைக்கவும், விட்டதை பிடிக்க அ.தி.மு.க.,வினர் தீவிரமாக மல்லுக்கட்டுகின்றனர். தி.மு.க., வேட்பாளர் மலையரசனுக்கு பக்கபலமாக தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு, பல தேர்தல்களை சந்தித்த அனுபவத்தை கொண்டு, கட்சி நிர்வாகிகள் மூலம் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவும் சூழ்நிலை உள்ளது. இதற்கிடையே இரு கட்சிகளின் வேட்பாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் பொருட்டு பா.ம.க., - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்திற்கு தயாராகியுள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு தி.மு.க., - அ.தி.மு.க., இடையே ஏற்பட்ட நேரடி போட்டியில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. அதேபோல், தற்போது நேரடி போட்டி ஏற்பட்டுள்ளதால், இம்முறை தாங்கள் வெற்றி வாகை சூடுவோம் என்ற நம்பிக்கையில் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, தொகுதிகள் வாரியாக வேட்பாளர் அறிமுக கூட்டம், செயல்வீரர்கள் கூட்டங்களை கூட்டி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். நேற்றுடன் மனுதாக்கல் முடிவடைந்த நிலையில், தேர்தல் பிரசாரம் மெல்ல மெட்ட சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
மேலும் தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் நேற்று முதல் தங்களது தேர்தல் பிரசாரத்தை துவக்கியுள்ளனர்.

