ADDED : நவ 20, 2024 06:39 AM

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் பிரசவித்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். துணை சேர்மன் அன்புமணிமாறன் முன்னிலை வகித்தார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கோகிலா வரவேற்றார். கூட்டத்தில் பிரசவித்த தாய்மார்கள் ஊட்டச்சத்து மிகுந்த பொருட்களை சாப்பிட வேண்டும். இதற்காக நெய், பேரிச்சம்பழம், புரோட்டின் பவுடர் உள்ளிட்ட 8 பொருட்களை கொண்ட ரூ.2,068 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகத்தை தமிழக அரசு வழங்குகிறது.
இதை கட்டாயம் சாப்பிடுவதுடன், குழந்தைகளை வளர்ப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ், பிரசவித்த தாய்மார்கள் 438 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சாந்தி, ஊராட்சி தலைவர்கள் அழகுவேல், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

