ADDED : ஏப் 17, 2024 12:18 PM
'குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை'
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில், ஊராட்சிக்கோட்டை குடிநீர் வினியோகம் தள்ளிப்போகிறது. கோடை தொடங்கியுள்ள நிலையில் வரும் நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே மாநகராட்சி வார்டுகளில் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்ய மக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வந்தது. இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்துக்கு வரதநல்லுாரில் காவிரி ஆற்றில் இருந்து, குடிநீர் எடுத்து வினியோகிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் தலைமை நீருந்து நிலையம் ஊராட்சிக்கோட்டை கதவணை மின் நிலையத்தின் மேற்புறம் அமைந்துள்ளது. தற்போது, 6.05 மீ., உயரத்துக்கு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. இதன் கொள்ளளவு, 42,100 மில்லியன் கன அடி. இதனால் குடிநீர் வழங்க தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சரணாலயம் அறிவிப்பால் தி.மு..க.,வுக்கு பாதிப்பு?
அந்தியூர்: பர்கூர் மலை வனப்பகுதியில், 33 குக்கிராமங்களில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் கால்நடை மேய்த்தல், விவசாயமாகும். கடந்த ஜன., மாதம் இந்த வனப்பகுதியை, புலிகள் சரணாலயமாக மத்திய அரசு அறிவித்தது.
இதனால் வனப்பகுதிக்குள் பர்கூர் இன காளை, பசு மாடுகள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது தடைபடும். விவசாயம் சார்ந்த பணிகளும் பாதிக்கும் என்பதால், அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி, மக்கள் போராட தொடங்கினனர். பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால்,
இதுபற்றி ஆளுங்கட்சியினரோ, அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆளுங்கட்சியினர் மீது மலைவாழ் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் ஓட்டு சதவீதம் குறையலாம் எனவும் தெரிகிறது.
அரசு அதிகாரி கார் மோதி முதியவர் படுகாயம்
காங்கேயம்: காங்கேயம் அருகேயுள்ள படியூர், நல்லிபாளையம் காலனியை சேர்ந்தவர் குமரன், 60, கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, படியூர் கைகாட்டி பிரிவு அருகே சாலையோரம் நடந்து சென்றார்.
அப்போது திருப்பூரில் இருந்து காங்கேயம் நோக்கி சென்ற, சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில் உதவி ஆணையரின் பொலீரோ கார் முதியவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அரசு கார் டிரைவர் மீது, காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
அரசு மருத்துவ கல்லுாரியில் 8வது உடலுறுப்பு தானம்
பெருந்துறை: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த சரஸ்வதி மகன் லோகநாதன், 21; உடற்கல்வி பட்டப் படிப்பு படித்து வந்தார். கடந்த, 11ம் தேதி இரவு சுமார் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் தலையில் ஏற்பட்ட காயத்துக்கு, தனியார் மருத்துவமனையில் ஆப்பரேஷன் நடந்தது. அதன் பிறகும் மூளை செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படாததால், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார்.
டாக்டர் பரிசோதனையில் மூளைச்சாவு அடைந்தை கண்டறிந்தனர். குடும்பத்தினர் ஒப்புதலின்படி அவருடைய கல்லீரல், இரு கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டன. கல்லுாரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி மற்றும் அலுவலர்கள், லோகநாதன் உடலுக்கு நேற்று மரியாதை செலுத்தி, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதன் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், எட்டாவது உடலுறுப்பு ஆப்பரேஷன் செய்யப்பட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.
'புல்லட்' களவாணி கைது
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த கணபதி பாளையத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த இவரது புல்லட் சமீபத்தில் திருட்டு போனது. அவர் புகாரின்படி தாராபுரம் போலீசால், களவாணியை தேடி வந்தனர். இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரை சேர்ந்த அழகு மணிகண்டன், 26, என்பவரை கைது செய்து, சிவலிங்கத்தின் புல்லட்டை பறிமுதல் செய்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

