/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பணம் இரட்டிப்பு ஆசை ரூ.20 லட்சம் போச்சு
/
பணம் இரட்டிப்பு ஆசை ரூ.20 லட்சம் போச்சு
ADDED : ஜூன் 29, 2024 08:30 PM
ஈரோடு:ஈரோடு மாவட்டம், அந்தியூர், சின்னதம்பிபாளையம், அண்ணமார்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 54; மளிகை கடை, செங்கல் சூளை வைத்துள்ளார். பர்கூர்மலையை சேர்ந்தவர்கள் மூர்த்தி, சேகர். இருவரும் முத்துசாமிக்கு பணம் இரட்டிப்பு செய்யலாம் என, ஆசை காட்டியுள்ளனர்.
நம்பிய முத்துசாமி, 20 லட்சம் ரூபாயுடன், ஈரோட்டுக்கு, ௨௩ம் தேதி அதிகாலை வந்துள்ளார். மூர்த்தி, சேகர் அறிமுகப்படுத்திய நபர்களிடம் பணத்தை தந்துள்ளார். அவர்கள் ஒரு சூட்கேசை தந்து, 30 லட்சம் ரூபாய் இருப்பதாக கூறியுள்ளனர். சூட்கேசை வாங்கிக் கொண்டு அந்தியூர் சென்று திறந்து பார்த்துள்ளார்.
அதில் இருந்தவை போலி ரூபாய் நோட்டுகளாக இருக்கவே அதிர்ச்சி அடைந்தார். மூர்த்தி, சேகரிடம் கேட்க முற்பட்டபோது, அவர்களின் மொபைல் போன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது. மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து, ஈரோடு டவுன் போலீசில், 25ம் தேதி புகார் செய்தார்.
விசாரித்த போலீசார், திருப்பூர் மாவட்டம், லக்க நாயக்கன்பட்டி ரமேஷ், 45, அவரது தாய்மாமா ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சாமிநாதன், 58, லக்க நாயக்கன்பட்டி பிரபு, 39, என, மூவரை கைது செய்தனர். இவர்களிடம் ஒரு மாருதி ஆம்னி வேனை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், ரூபாய் நோட்டுகளை இரட்டிப்பாக்கி தருவதாக மோசடி செய்ததாக, ரமேஷ், சாமிநாதன் மீது, திருப்பூர் போலீசில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மூர்த்தி, சேகரை போலீசார் தேடி வருகின்றனர்.

