/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பில் வீரசின்னம்பட்டி நெடுங்குளம்
/
கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பில் வீரசின்னம்பட்டி நெடுங்குளம்
கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பில் வீரசின்னம்பட்டி நெடுங்குளம்
கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பில் வீரசின்னம்பட்டி நெடுங்குளம்
ADDED : செப் 26, 2024 05:37 AM

நத்தம்: வீரசின்னம்பட்டி நெடுங்குளத்தில் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் நீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இவற்றை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
நத்தம் அருகே வீரசின்னம்பட்டி ஊராட்சியில் உள்ளது நெடுங்குளம். 21.17 ஏக்கரில் உள்ள இக்குளத்திற்கு சிறுமலையிலிருந்து உருவாகி வரும் சந்தனவர்த்தினி ஆற்று நீர் வருகிறது .
நெடுங்குளம் நிறைந்தால் அதனை சுற்றி பலநுாறு ஏக்கர் கொண்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் போர் வெல் , கிணறுகள் உள்ளிட்டவைகளில் தண்ணீர் பெருகும். சுற்று கிராமங்களில் குடிதண்ணீர் பிரச்னையும் இருக்காது.
தற்போது நெடுங்குளம் போதுமான பராமரிப்பு இன்றி குளத்தில் 90 சதவீதம் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. தனி நபர்களும் குளத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர். கரையில் இருந்து பார்த்தால் அடர்ந்த காடு போல் காட்சியளிக்கிறது. குளத்திற்கு வரும் நீரும் கருவேலமரங்களால் குறுகிய நாளிலே வறண்டு காணப்படுகிறது. இதனை தடுக்க கருவேல மரங்களை அகற்றி குளத்தை துார்வார வேண்டும்.
காடு போல் காட்சி
எஸ். கடம்பவனம், விவசாயி, வீரசின்னம்பட்டி: நெடுங்குளத்தின் அருகிலே விவசாய நிலம் உள்ளது.வீரசின்னம்பட்டி பகுதி விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் நெடுங்குளம் தற்போது சீமை கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பால் காடு போல் காட்சி அளிக்கிறது. குளத்தில் தேங்கும் தண்ணீரை சீமை கருவேலமரங்கள் உறிஞ்சு விடுகின்றன.
இதனால் போதுமான தண்ணீர் இருந்தும் தேக்கி வைக்க வழி இல்லாததால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களைக் கொண்டு குளத்தை சுத்தம் செய்தால் இப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். விவசாயத்தை காக்க குளத்தை துார்வாரி கருவேல மரங்களை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குளமே தெரியாது ஆக்கிரமிப்பு
இரா.பிரபாகரன், விவசாயி, வீரசின்னம்பட்டி:சந்தனவர்த்தினி ஆற்றில் இருந்து வரும் தண்ணீரால் நெடுங்குளம் நிறைந்தால் வீரசின்னம்பட்டியில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.
தற்போது குளமே தெரியாதபடி கருவேலமரங்கள், செடிகள் குளத்தை ஆக்கிரமித்துள்ளன. பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணம். கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க ஊராட்சி நிர்வாகம் உடனடியாக குளத்தை பராமரித்து தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

