/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காக்காத்தோப்பூர் மேம்பால பணி பாதியில் நிறுத்தம்
/
காக்காத்தோப்பூர் மேம்பால பணி பாதியில் நிறுத்தம்
ADDED : மார் 04, 2026 06:13 AM

வேடசந்துார்: வேடசந்துார் அருகே காக்காத்தோப்பூர் பிரிவு பகுதியில் ரூ.19 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி திடீரென நிறுத்தப்பட்டதால் வாகன விபத்துகள் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது. எனவே பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்துார் அருகே காக்காத்தோப்பூர் பிரிவு உள்ளது. போக்குவரத்து மிகுந்த இந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது. மேம்பாலம் கட்ட கோரிக்கை எழுந்ததன் பேரில் நெடுஞ்சாலை ஆணையம் ரூ.19 கோடி நிதி ஒதுக்கியது.
முதற்கட்ட பணிகள் துவங்கி நடந்த நிலையில் 3 மாதத்திற்கு முன்பு திடீரென பணிகள் நிறுத்தப்பட்டது. பால பணிகள் பாதியில் கிடப்பில் போட்டதால் அந்த இடம் மேலும் அபாயகரமான பகுதியாக மாறியுள்ளது.
வேடசந்தூர் எம்.ஜி.ஆர்., மன்ற மேற்கு ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியன், 'தொடர் விபத்துகளால் 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதனை தடுக்க இப்பகுதியில் மேம்பாலம் அமைவது அவசியம். அப்போது தான் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட முடியும்.
இல்லையெனில் எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனே பயணிக்கும் நிலை தொடரும்' என்றார்.
குடகனாறு பாதுகாப்பு சங்கத்தலைவர் ராமசாமி, 'மேம்பால கட்டுமான பணிகளுக்கு குடகனாறு தண்ணீரை பயன்படுத்துகின்றனர். அதற்கு கூட பயன்படுத்த தகுதியற்ற நீராக குடகனாறு தண்ணீர் மாறிவிட்டது. எனவே மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. மக்களின் சிரமத்தை போக்க ஆரம்பிக்கப்பட்ட இந்த மேம்பால பணியை விரைந்தும், தரமாகவும் அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்' என்றார்.
தீர்வு மேம்பால பணிகளுக்கு இடையூறாக உள்ள மின்கம்பிகள், கம்பங்களை அகற்ற வேண்டும். அப்போது தான் தடையின்றி பணிகள் செய்ய முடியும். தற்போது பணிகள் நிறுத்தப்பட்டதற்கு இதுவும் காரணம். மின்கம்பங்களை மாற்று வழியாக கொண்டு செல்வதில் ஏற்படும் செலவீனங்களுக்கு அச்சப்பட்டு பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை இழுபறியாகிறது. மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை, ஒப்பந்ததாரர் அனைவரும் கலந்தாலோசித்து இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும். இல்லையெனில் கூடுதல் நிதி பெற்று பிரச்னையை முடிவுக்கு கொண்டுவரலாம்.
நெடுஞ்சாலைத்துறை இன்ஜினீயர் வேல்முருகன், 'மேம்பால பணிகளுக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்றித் தருமாறு மின்வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். மின்கம்பம் சீரமைப்புக்கு பின் மேம்பால பணிகள் துரிதமாக துவங்கி முடிக்கப்படும்' என்றார்.

