/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொளஞ்சியப்பர் கோவில் திருப்பணிக்கு நிதி... குவிகிறது; கோவிலில் மூன்றாம் பிரகாரம் அமைக்கவும் ஆய்வு
/
கொளஞ்சியப்பர் கோவில் திருப்பணிக்கு நிதி... குவிகிறது; கோவிலில் மூன்றாம் பிரகாரம் அமைக்கவும் ஆய்வு
கொளஞ்சியப்பர் கோவில் திருப்பணிக்கு நிதி... குவிகிறது; கோவிலில் மூன்றாம் பிரகாரம் அமைக்கவும் ஆய்வு
கொளஞ்சியப்பர் கோவில் திருப்பணிக்கு நிதி... குவிகிறது; கோவிலில் மூன்றாம் பிரகாரம் அமைக்கவும் ஆய்வு
ADDED : நவ 20, 2024 08:22 AM

விருத்தாசலம்: 'தினமலர்' செய்தி எதிரொலி காரணமாக, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் கும்பாபிேஷக திருப்பணி துவங்கும் நிலையில், அடிப்படை வசதிகளுக்கு நிதியுதவி குவிந்து வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரியில் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், பிராது கட்டினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அப்போதைய பெப்சி சி.இ.ஓ., வேண்டுதல் நிறைவேறியதும் சுவாமிக்கு தங்க கிரீடம் காணிக்கை வழங்கினார். முன்னாள் முதல்வர் ஜெ., பெங்களூரு சிறையில் இருந்த போது, முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா ஜாமின் வேண்டி பிராது கட்டியதும் 3வது நாளில் ஜாமின் கிடைத்தது. அதன் பலனாக, 3 வெள்ளிக் கட்டிகளை நேர்த்திக்கடனாக செலுத்தினார்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டி, அவரது மனைவி துர்கா, பிராது கட்டி, முதல்வரானதும், நேர்த்திக்கடன் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
இக்கோவிலுக்கு கனடா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகள் மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உட்பட பிற மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கோவிலில் வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கு அடிப்படை வசதிகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து தரவில்லை. குளியலறை, கழிவறை, முடி காணிக்கை செலுத்துமிடம், திருமண மண்டபம் என பல்வேறு குறைபாடுகள் காரணமாக பக்தர்கள் நிம்மதியாக தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. பலமடங்கு கட்டணம் வசூலித்தும், அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் முகம் சுளிக்கும் அவலம் தொடர்ந்தது.
'தினமலர்' செய்தி எதிரொலி
குறைபாடுகளை சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, பழுதடைந்த திருமண மண்டபத்தை சீரமைக்கும் வகையில், அறநிலையத்துறை சார்பில் 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாளை (இன்று) டெண்டர் விட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதுபோல், பழுதான கழிவறை, குளியலறையை நடிகை நளினி ராமராஜன் சகோதரர் கார்த்திகேயன், 26 லட்சம் ரூபாயில் சீரமைத்து தருவதாகவும், அதற்குரிய திட்ட மதிப்பீட்டை தயாரித்து தரவும் உறுதியளித்துள்ளார்.
தொல்லியல் வல்லுனர் குழு ஆய்வு
கோவிலில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகள் அருள்பாலிக்கும் பிரகாரத்திற்கு பின்பகுதியில் இரண்டாவது பிரகாரம் கட்ட அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், மூன்றாவது பிரகாரம் அமைக்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக, இந்து சமய அறநிலையத்துறையின் தொல்லியல்துறை வல்லுனர் இளஞ்செழியன் தலைமையில் ஸ்தபதி சக்திவேல் நேற்று கோவிலில் ஆய்வு செய்தனர். அப்போது, கோவிலின் பின்புற வளாகத்தில் மூன்றாவது பிரகாரம் அமைக்கும் இட வசதி, பக்தர்கள் வந்துசெல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இது தொடர்பான அறிக்கையின் கீழ் அறநிலையத்துறை அனுமதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆய்வின்போது, கோவில் செயல் அலுவலர் பழனியம்மாள், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கனககோவிந்தசாமி, பா.ம.க., நகர்மன்ற கவுன்சிலர் சிங்காரவேல், ராஜேஷ் குருக்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நிதியுதவி தாராளம்
கடந்த இரண்டு நாட்களுக்கு கொளஞ்சியப்பர் கோவிலுக்கு 2.50 கோடி ரூபாயில் திருப்பணி செய்து, கும்பாபிேஷகம் நடத்துவது குறித்து அமைச்சர் கணேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அன்று, அமைச்சர் கணேசன் 1 லட்சத்து 11 ஆயிரத்து 111 ரூபாயும், விருத்தாசலம் பாலக்கரை சரோஜா என்ற பக்தர் 2 லட்சம், மங்களூர் ஒன்றிய சேர்மன் 1 லட்சத்து 1,000 ரூபாய் உட்பட 1,000 மற்றும் 101 என பக்தர்கள் பலர் நன்கொடை வழங்கினர்.
கொளஞ்சியப்பர் சுவாமியிடம் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பலரும், கோவில் கும்பாபிேஷக திருப்பணிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட முட்டி மோதி வருகின்றனர்.
இதை தவிர்த்து, 'தினமலர்' வெப்சைட்டில் நாளிதழ் செய்தியை பார்த்த பலரும் தாமாக முன்வந்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதாக முன்வருகின்றனர். இதனால் கொளஞ்சியப்பர் கோவிலில் தங்குமிடம், குளியலறை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தன்னிறைவுபெறும் என்பதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

