/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாயமான சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம்: புதுப்பிக்க வலியுறுத்தல்
/
மாயமான சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம்: புதுப்பிக்க வலியுறுத்தல்
மாயமான சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம்: புதுப்பிக்க வலியுறுத்தல்
மாயமான சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம்: புதுப்பிக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 07, 2024 11:03 PM
உடுமலை : திருப்பூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையங்களை, மீண்டும் மாணவர்கள் பயன்படுத்த, புதுப்பிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு இயற்கையை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பசுமைப்படை செயல்படுகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில், 250 பசுமைப்படை மற்றும் 359 சுற்றுச்சூழல் மன்றங்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ளன.
மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த, சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையங்கள் மாவட்ட அளவில், குறிப்பிட்ட இடங்களில் அமைக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில், நான்கு இடங்களில் மட்டுமே இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சேர்த்து, உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தகவல் மையம் முன்பு அமைக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் சார்ந்த புத்தகங்கள் வைத்து, நுாலகமாகவும், மாணவர்களுக்கு இயற்கை பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சிகளை நடத்தவும், இந்த மையத்தை பயன்படுத்த வேண்டும்.
ஆனால், தற்போது மாவட்ட அளவில் இந்த மையங்கள் செயல்பாடில்லாமல் உள்ளன. இதனால், மாணவர்களிடம் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மேலும், இப்போது மையங்கள் மீண்டும் பள்ளி வகுப்பறைகளாக மாறி விட்டன. இம்மையம் அமைப்பதின் நோக்கமே வீணாகி வருகிறது.
எனவே, அனைத்து பள்ளிகளும், இந்த மையத்தை பயன்படுத்தும் வகையில் புதுப்பிக்க சுற்றுச்சூழல் துறையின் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாரம் ஒருமுறை சுழற்சி முறையில், சுற்றுப்பகுதியிலுள்ள பள்ளி மாணவர்கள் மையத்தை பார்வையிடவும், அங்கு சிறப்பு சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினால் மட்டுமே, மாணவர்களுக்கு இந்த மையம் பயன்படும் என, சுற்றுச்சூழல் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக அரசும் இதில் உரிய கவனம் செலுத்தி, சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையத்தை புதுப்பிக்க வேண்டும் என, பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

