/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளம்பரப் பலகைகள் நகரில் மறுபடியும்... முளைக்கிறது!பலவீன கட்டடங்களிலும் கட்டமைப்பு
/
விளம்பரப் பலகைகள் நகரில் மறுபடியும்... முளைக்கிறது!பலவீன கட்டடங்களிலும் கட்டமைப்பு
விளம்பரப் பலகைகள் நகரில் மறுபடியும்... முளைக்கிறது!பலவீன கட்டடங்களிலும் கட்டமைப்பு
விளம்பரப் பலகைகள் நகரில் மறுபடியும்... முளைக்கிறது!பலவீன கட்டடங்களிலும் கட்டமைப்பு
ADDED : ஏப் 26, 2024 01:16 AM

-நமது நிருபர்-
தேர்தல் காலத்தைப் பயன்படுத்தி, கோவை நகருக்குள் எக்கச்சக்கமான விளம்பரப் பலகைகள் மீண்டும் முளைக்கத் துவங்கியுள்ளன. அவற்றில் பல இரும்புப் பலகைகள், மிகவும் பலவீனமான கட்டடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அதிகளவு விபத்து உயிரிழப்புகள் நடக்கும் மாவட்டமாக கோவை உள்ளது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ரோட்டோரங்களில் அமைக்கப்படும் பிரமாண்ட விளம்பரப் பலகைகள், வாகன ஓட்டிகளின் கவனத்தைத் திசை திருப்புவதும் மிக முக்கியக் காரணமாகவுள்ளது. ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யும்போது, இந்த காரணம் குறிப்பிடப்படுவதில்லை.
கோவையில் இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில், மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளே உள்ளனர். கடந்த ஆண்டில் வெளியிட்ட அரசாணையின்படி, இவற்றுக்கு அனுமதி தரும் அதிகாரமும், அதேபோல அகற்றும் பொறுப்பும், உள்ளாட்சி அமைப்புகளுக்கே வழங்கப்பட்டுள்ளது.
கோவை நகரில், மாநகராட்சி கமிஷனரே, இந்த விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். ஆனால் கோவையில் சமீப காலமாக அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் வைப்பது மிகவும் அதிகரித்துள்ளது.
அதிலும் குறிப்பாக, லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு, அனைத்து அதிகாரிகள் தேர்தல் பணியில் இருந்ததைப் பயன்படுத்தி, நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான விளம்பரப் பலகைகள் முளைத்துள்ளன. ஒரே ஒரு நிறுவனம் சார்பில், நகருக்குள் 20க்கும் மேற்பட்ட இடங்களில் புதிதாக விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் எதற்குமே மாநகராட்சியில் அனுமதி பெறப்படவில்லை.
அத்தனை இடங்களுக்கும் சேர்த்து ஒற்றைச் சாளர முறையில் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால் அனுமதி தரும் முன்பே, இவை வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல இரும்புப் பலகைகள், மிகவும் பலவீனமான கட்டடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
கோவை நகருக்குள் அதிகரித்துள்ள விளம்பரப் பலகைகளை அகற்றுவது குறித்து, மாநகராட்சி நகர அமைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தேர்தல் பணியில் இருந்ததால் இவற்றைக் கவனிக்க முடியவில்லை. அத்துடன் ஆட்கள் பற்றாக்குறையும் அதிகமாகவுள்ளது. ஆனாலும் அனுமதியற்ற விளம்பரப் பலகைகளைக் கணக்கிட்டு, விரைவில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.' என்றார்.

