/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிக்குது வெயிலு... தகிக்குது உடம்பு! முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அரசு உத்தரவு
/
அடிக்குது வெயிலு... தகிக்குது உடம்பு! முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அரசு உத்தரவு
அடிக்குது வெயிலு... தகிக்குது உடம்பு! முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அரசு உத்தரவு
அடிக்குது வெயிலு... தகிக்குது உடம்பு! முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அரசு உத்தரவு
ADDED : ஏப் 22, 2024 01:27 AM

கோவை:வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள சூழலில், மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதுடன், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள, மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவையில் சமீபகாலமாக, 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால், முதியவர்கள் வெளியே வரவே பயப்படுகின்றனர்.
வரும் காலங்களில் அனல் காற்றின் தாக்கம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, பொது மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு, மாநகராட்சிகளுக்கு நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
முன்னுரிமை
அதன்படி, அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும். பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர், தற்காலிக பந்தல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில், தொழிலாளர்களுக்கு போதிய குடிநீர் வசதி, ஓய்வு இடங்கள் அமைத்துத்தருவது அவசியம்; வெயிலின் தன்மை கருதி பணி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும். குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் குடிநீர் லாரிகள் வாயிலாக வினியோகம் செய்ய வேண்டும்.
விழிப்புணர்வு
பொது மக்கள் கூடும் இடங்களில் ஒலிப்பெருக்கி, எல்.இ.டி., திரை வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனல் காற்று வீசும் காலங்களில், பொது மக்கள் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை குறித்து, வாகனங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
முக்கிய சந்திப்புகளில், அனல் காற்றின் தாக்கம் குறித்து விழிப்புணர்வு தட்டிகள் அமைக்க வேண்டும். பாதிப்புக்குள்ளாகும் இடங்களை கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். துாய்மை பணியாளர்கள், பிற களப்பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பணிகள் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழிமுறைகள்
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வெயிலின் தாக்கத்தால், மக்கள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே, பொது மக்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவும், நகராட்சி நிர்வாக இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வழிமுறைகள் பின்பற்றப்படும்' என்றார்.

