/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சித்ராபவுர்ணமி விழா
/
தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சித்ராபவுர்ணமி விழா
ADDED : ஏப் 26, 2024 12:28 AM

கோவை;கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சித்ராபவுர்ணமி விழா விமரிசையாக நடந்தது.
சித்ராபவுர்ணமி விழா, மஹாகணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை 6:00 மணிக்கு சிவகாமியம்மை உடனமர் சந்திரசேகரருக்கு திருமஞ்சனமும், லட்சார்ச்சனை துவங்கியது.
வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருட்காட்சி அளித்தார். பக்தர்கள் கிரிவலம் வந்தும், மலை ஏறியும் சுவாமியை தரிசித்தனர்.
மாலை 3:00 மணிக்கு ஒயிலாட்டம் மற்றும் கும்மியாட்டம் நடந்தது. தொடர்ந்து திருமுறை பாராயணத்துடன் தர்மலிங்கேஸ்வரருக்கு மஹாஅபிஷேகம் நடந்தது.
வெயிலில் பக்தர்கள் அவதி
சித்ரா பவுர்ணமியையொட்டி, கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. கிரிவலப்பாதையில் பல இடங்களில் தண்ணீர், நீர் மோர் வழங்கப்பட்டது. காலை முதல் மாலை வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 10 மணி முதலே வெயில் கொளுத்த துவங்கியது. கிரிவலம் சென்ற பக்தர்கள் பலர் செருப்பு அணியவில்லை.
நேரம் ஆக, ஆக நிலத்தின் சூடு தாங்காமல் பலர் அவதிப்பட்டனர். மரங்களும் காய்ந்து கிடப்பதால், நிழலில் ஒதுங்க முடியாமல் பக்தர்கள் தவித்தனர். இளம் பெண்கள் தாங்கள் அணிந்திருந்த துப்பட்டாவை கழற்றிபோட்டு அதன்மேல் நின்றது பரிதாபமாக இருந்தது. சிலர் காலில் துணிகளை சுற்றிக்கொண்டு நடந்தனர்.
நடந்து செல்லும் பாதையில் இடையிடையே கார்பெட் வசதி, கூடுதல் இடங்களில் சாமியானா அமைத்திருந்தால் வசதியாக இருந்திருக்கும். பக்தர்கள் சிரமப்பட்டதை அறிந்து, செருப்பு அணிந்து கிரிவலம் செல்லலாம் என ஒலிபெருக்கியில் தாமதமாக அறிவிப்பு வெளியிட்டனர். வரும் ஆண்டுகளில் கோவில் நிர்வாகம் இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

