/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவி உட்பட இருவர் ரயிலில் அடிபட்டு பலி
/
மாணவி உட்பட இருவர் ரயிலில் அடிபட்டு பலி
ADDED : டிச 21, 2025 04:36 AM
கடம்பத்துார்: கடம்பத்துார் ரயில் நிலையத்தில், கடவுப்பாதையை கடக்க முயன்ற கல்லுாரி மாணவி மற்றும் அடையாளம் தெரியாத நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.
கடம்பத்துார் ஊராட்சியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன், 55. இவரது மகள் ஹரிதா, 17, திருநின்றவூர் ஜெயா நர்சிங் கல்லுாரியில் படித்து வந்தார். இவர், நேற்று காலை 8:00 மணிக்கு, கல்லுாரி செல்வதற்காக, கடம்பத்துார் ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, நிரந்தரமாக மூடப்பட்டிருந்த ரயில்வே கேட் பகுதியை, மொபைல் போன் பேசியபடி கடக்க முயன்ற போது, சென்னை நோக்கி விரைவு ரயில் வருவதை பார்த்து கேட் அருகே நின்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக விரைவு ரயில் அவர் மீது உரசியது.
இதில், துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஹரிதா, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து, திருவள்ளூர் இருப்புப்பாதை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மற்றொரு சம்பவம் கடம்பத்துார் ஒன்றியத்தில், செஞ்சி பானம்பாக்கம் ரயில் நிலைய கடவுப்பாதையை, நேற்று காலை 6:00 மணிக்கு கடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர், சென்னை நோக்கி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே போலீசார், உடலை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

