/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்குவரத்து மாற்றம்: பின்பற்ற வேண்டுகோள்
/
போக்குவரத்து மாற்றம்: பின்பற்ற வேண்டுகோள்
ADDED : பிப் 07, 2024 12:14 AM

வியாசர்பாடி :புளியந்தோப்பு - வியாசர்பாடி இடையே கணேசபுரம் சுரங்கப்பாலம் அருகே, நான்கு வழிப்பாதையாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
142 கோடி ரூபாய் செலவில், 600 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலத்தில், இந்த மேம்பாலம் கட்டப்பட உள்ளது. வடசென்னையில் ஒவ்வொரு மழைக்காலத்திலும், கணேசபுரம் சுரங்கப்பாலம் மூழ்குவது தொடர்கதையாகி வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாகவும், வாகன நெரிசலைக் குறைக்கவும், இந்த மேம்பாலம் கட்டப்படுகிறது.
புளியந்தோப்பு ஆடுதொட்டியை அடுத்த கால்வாய் பகுதியில் துவங்கும் இந்த மேம்பாலம், ரயில்வே சுரங்கப்பாதையை கடந்து, வியாசர்பாடி ஏரிக்கரை சந்திப்பு வரை கட்டப்படுகிறது.
மேம்பாலப் பணியை விரைவுபடுத்தும் வகையில், இப்பகுதியில் கடந்த ஜன., 2ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
ஓராண்டிற்கு இந்த போக்குவரத்து மாற்றம் இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.
தற்போது, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட இடத்தில் இருவழியிலும் வாகனங்களை அனுமதிப்பதால், 24 மணிநேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதிலும், 'பீக் - ஹவரில்' குறுகலான சாலையில் இருபுறமும் வாகனங்கள் செல்வதால், கடும் நெரிசல் ஏற்பட்டு, பாலம் அமைக்கும் பணிக்கும் இடையூறு ஏற்படுகிறது.
இதனால் அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லுாரிக்கு செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இப்பகுதியில் அமல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றத்தை அனைவரும் பின்பற்ற வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

