/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீர் விவகாரம்... விஸ்வரூபம்! மண்டல குழு கூட்டங்களில் சரமாரி குற்றச்சாட்டு
/
சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீர் விவகாரம்... விஸ்வரூபம்! மண்டல குழு கூட்டங்களில் சரமாரி குற்றச்சாட்டு
சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீர் விவகாரம்... விஸ்வரூபம்! மண்டல குழு கூட்டங்களில் சரமாரி குற்றச்சாட்டு
சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீர் விவகாரம்... விஸ்வரூபம்! மண்டல குழு கூட்டங்களில் சரமாரி குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 13, 2024 12:00 AM

'சென்னையில் பல பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோக்கப்பட்டு வருவதால், வாந்திபேதி, வயிற்றுப்போக்கு போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படுகின்றன ' என, மண்டல குழு கூட்டங்களில், கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றம்சாட்டினர்.
சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில், ஒரு கோடி மக்களுக்கு, தினமும் 106 கோடி லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், பல இடங்களில் உள்ள குழாய்களில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது.
குறிப்பாக, சைதாப்பேட்டை, தி.நகர், ஆலந்துார், திருவொற்றியூர் உள்ளிட்ட பல இடங்களில், கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகத்தால், மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வாந்தி பேதி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகளால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது தொடர்ந்து வருகிறது.
கழிவுநீர் கலந்த குடிநீரால் பாதிக்கப்படும் மக்கள், தங்களது வார்டு கவுன்சிலரை முற்றுகையிட்டு, புகார் தெரிவித்து வருகின்றனர்.
அவ்வாறு பாதிக்கப்படும் கவுன்சிலர்கள், மாநகராட்சி மண்டல கூட்டம், கவுன்சில் கூட்டத்தில், குடிநீர் வாரியத்தின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மாதாந்திர கவுன்சில் கூட்டத்தில் இப்பிரச்னை எதிரொலித்தது. 'கவுன்சிலர்கள் கட்டுப்பாட்டில், குடிநீர் வாரியம் வராது என்பதால், அவர்கள் எங்களை மதிப்பதில்லை. எனவே, மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் குடிநீர் வாரியத்தையும் கொண்டு வர வேண்டும்' என்று, கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இதைத் தொடர்ந்து, மாநகராட்சி மாதாந்திர கவுன்சில் கூட்டத்திற்கு, குடிநீர் வாரிய அதிகாரிகளையும் மேயர் பிரியா வரவழைத்தார். அவர்களிடமே நேரடியாக குடிநீர் பிரச்னை தொடர்பாக கவுன்சிலர்கள் புகார் அளித்தனர்.
அவ்வாறு புகார் அளித்தும், இதுவரை குடிநீர்பிரச்னைக்கு தீர்வு ஏற்படாமல் உள்ளது.
இந்நிலையில், ஆலந்துார், திருவொற்றியூர் மண்டலக்குழு கூட்டங்களில், கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் தொடர்பாக கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
நேற்று நடந்த ஆலந்துார் மண்டல குழு கூட்டத்தில் ஆலந்துார், முகலிவாக்கம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வினியோகிக்கப்படும் குடிநீர், குடிக்க உகந்ததாக இல்லை என, கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
கூட்டத்தில் 160வது வார்டு கவுன்சிலர் பிருந்தா பேசியதாவது:
என் வார்டின் பல தெருக்களில், சில மாதங்களாக கழிவுநீர் கலந்த குடிநீர் தான் வருகிறது. சமீபத்தில், 15 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுத்து பரிசோதித்ததில், 'ஒன்பது மாதிரி முடிவுகள் குடிநீர் குடிக்க லாயக்கற்றது' என முடிவு வந்துள்ளது.
மழைக்காலம் வர உள்ளதால், இப்பிரச்னையை மேலும் அதிகரிக்காமல் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதேபோல், 161வது வார்டு கவுன்சிலர் ரேணுகா பேசுகையில், ''ஆதம்பாக்கம், ஆலந்துார் என பல இடங்களில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது,'' என்றார்.
வார்டு 156ன் கவுன்சிலர் செல்வேந்திரன் பேசுகையில், ''காமாட்சி நகரில், 20 நாட்களுக்கு முன், குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது. அதை சரிசெய்ய ஐந்து இடங்களில் பள்ளம் தோண்டி சாலை சேதப்படுத்தப்பட்டது.
''ஆனால், பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தப்படவில்லை. பாதாள சாக்கடை திட்டத்தால் சாலையில் குடிநீர் லாரிகள் வரவும் வழியில்லை. மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்,'' என்றார்.
அதேபோல், திருவொற்றியூர் மண்டலக்குழு கூட்டத்திலும், குடிநீர் பிரச்னை அனல் கிளப்பியது.
இதில், 7வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் பேசுகையில், ''கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின்கீழ் பெறப்படும் குடிநீர் முறையாக வினியோகம் இல்லை. குடிநீர் தரமாக இல்லை. அதை குடிக்கலாம் என யாரும் கூறமுடியாது,'' என்றார்.
வார்டு 2ன் கவுன்சிலர் கோமதி சந்தோஷ் பேசுகையில், ''வார்டு முழுதும், குடிநீர் மஞ்சள் நிறமாகவும், புழுக்களுடனும் வருகிறது. அதை மக்கள் பயன்படுத்த முடியவில்லை. குறைந்தபட்சம் குடிநீர் தொட்டியையாவது சுத்தம் செய்ய வேண்டும்,'' என்றார்.
பல இடங்களில், 40 ஆண்டுகள் பழமையான குழாய்கள் வாயிலாக குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது. பெரும்பாலான குடிநீர் குழாய்கள், மழைநீர் வடிகால் அருகாமையில் தான் செல்கின்றன. மழைநீர் வடிகால் பணியை மாநகராட்சி மேற்கொள்ளும்போது, குடிநீர் குழாயை சேதப்படுத்தப் படுகின்றன. கழிவுநீர் கலந்த குடிநீர் வருவதாக, சென்னையில் தினமும் 10 முதல் 15 புகார்கள் வருகின்றன. அந்த புகார்களின் அடிப்படையில், ஐந்து இடங்களுக்கு மேல் தோண்டப்பட்டால்தான், எந்த இடத்தில் பிரச்னை இருக்கிறது என்பதை கண்டறிய முடியும். இதற்கு பல்துறைகளின் முயற்சியின் அடிப்படையில் தான் நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியும்.
- சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம்
- நமது நிருபர் குழு -

