/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில் நிலைய பெயர் பலகை அகற்றம்: பயணியர் அவதி
/
ரயில் நிலைய பெயர் பலகை அகற்றம்: பயணியர் அவதி
UPDATED : நவ 08, 2024 07:55 PM
ADDED : நவ 08, 2024 12:06 AM

ஆவடி, : சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் ஒன்றான இந்து கல்லுாரி ரயில் நிலையத்தில், இரு நடைமேடை மற்றும் நான்கு இருப்பு பாதை உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த ரயில் நிலையம், 1979ல் மின் மயமாக்கப்பட்டது.
இந்நிலையத்தை, தினமும் 30,000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். அப்படி இருந்தும், அடிப்படை தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. கடந்த 2018ல், 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்களை இயக்குவதற்காக நடைமேடைகள் நீட்டிக்கப்பட்டன. ஆனால், இன்று வரை நிழற்குடைகள் அமைக்கப்படவில்லை.
மாணவர்கள் தாக்குதல், சிக்கல் பிரச்னை மற்றும் குற்றச்செயல்கள் நடப்பதால், ரயில்வே நிர்வாகத்தின் உத்தரவுபடி, கடந்த சில நாட்களாக 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடக்கின்றன.
இந்நிலையில், கிழக்கு பகுதியில் ஆவடி மார்க்கத்தின் இரு நடைமேடையிலும் அமைக்கப்பட்டு இருந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. தற்போது, 'டிக்கெட் கவுன்டர்' அமைந்துள்ள பகுதியில் மட்டுமே, பெயர் பலகை உள்ளது. அதுவும் எளிதில் அடையாளம் காணும் வகையில் இல்லை.
இதனால், சென்னையில் இருந்து இந்து கல்லுாரிக்கு வரும் பயணியர் சிலர், வழிதவறி அடுத்த நிலையமான பட்டாபிராமில் இறங்கி, மீண்டும் திரும்பி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பெயர் பலகை வெட்டி எடுக்கப்பட்டதால், பயணியரை வழியனுப்ப வருவோர் சிலர், முதல் நடை மேடையில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். இதனால், விபத்து அசம்பாவிதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

