/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சங்கர் நகர் காவல் நிலையத்தில் புதிதாக நுாலகம் திறப்பு
/
சங்கர் நகர் காவல் நிலையத்தில் புதிதாக நுாலகம் திறப்பு
சங்கர் நகர் காவல் நிலையத்தில் புதிதாக நுாலகம் திறப்பு
சங்கர் நகர் காவல் நிலையத்தில் புதிதாக நுாலகம் திறப்பு
ADDED : மார் 27, 2025 11:50 PM

பம்மல், பம்மலில், சங்கர் நகர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் உள்ளிட்ட பிரிவுகளில், 40க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றுகின்றனர்.
திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கும் குற்றவாளிகள், விசாரணைக்காக இக்காவல் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இது மட்டுமின்றி, குற்றவாளிகளை காண, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்கள், அது தொடர்பான விசாரணை ஆகியவற்றுக்காகவும் பலர் வந்து செல்கின்றனர்.
காவல் நிலையத்திற்கு வரும் மக்கள், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அதுபோன்ற நேரங்களில், அவர்களின் நேரம் வீணாகிறது.
இதை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் மட்டுமின்றி, காவலர்களும் தங்களது நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில், காவல் நிலையத்தில் நுாலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதை சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சரவணன் திறந்து வைத்தார்.
தாம்பரம் மாநகராட்சி, 29வது வார்டு கவுன்சிலர் சண்முகசுந்தரி, தனது சொந்த செலவில், இந்த நுாலகத்தை அமைத்து கொடுத்துள்ளார்.
இங்கு, முதல் கட்டமாக, சுதந்திர போராட்ட தியாகிகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, சட்டம் குறித்த விழிப்புணர்வு, பொழுது போக்கு போன்ற, 140 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்னும், 500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட உள்ளன.
இதுமட்டுமின்றி, அன்றாட நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளும் வகையில், முன்னணி நாளிதழ்களும் வைக்கப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக, காவல் நிலையத்திற்கு வருவோர், தங்களது நேரத்தை வீணாக்காமல், புத்தகங்களை படித்து, அறிவை பயனுள்ள வகையில் வளர்த்துக் கொள்ள முடியும்.

