sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

துாய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் புதிதாக ஆள் எடுப்பு;ஐகோர்ட்டில் தெளிவுபடுத்தியது ஒப்பந்த நிறுவனம்

/

துாய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் புதிதாக ஆள் எடுப்பு;ஐகோர்ட்டில் தெளிவுபடுத்தியது ஒப்பந்த நிறுவனம்

துாய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் புதிதாக ஆள் எடுப்பு;ஐகோர்ட்டில் தெளிவுபடுத்தியது ஒப்பந்த நிறுவனம்

துாய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் புதிதாக ஆள் எடுப்பு;ஐகோர்ட்டில் தெளிவுபடுத்தியது ஒப்பந்த நிறுவனம்

3


ADDED : செப் 02, 2025 01:49 AM

Google News

3

ADDED : செப் 02, 2025 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'துாய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பாததால், 2,000 டன் குப்பை தேங்கியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் சென்னையில் நோய் பரவும் ஆபத்து உள்ளது. வேறு வழியின்றி புதிதாக ஆட்களை நியமிக்க வேண்டி வரும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தனியார் ஒப்பந்த நிறுவனம் தெளிவுபடுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில், துாய்மை பணிகளை தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, ஜூன் மாத மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

துாய்மை பணியை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து, துாய்மை பணியாளர்கள், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன், ஆக., 1 முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி நிர்வாகமும், போலீசாரும் பல கட்ட பேச்சு நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. ஆக., 13 வரை போராட்டம் தொடர்ந்தது.

தீர்மானம் ரத்து போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, வழக்கறிஞர் வினோத் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து, அனுமதியின்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துாய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. பின், போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்களை, இரவோடு இரவாக போலீசார் அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில், துாய்மை பணியை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அம்பத்துாரைச் சேர்ந்த 'உழைப்போர் உரிமை இயக்கம்' சார்பில், அதன் தலைவர் கு.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி கே.சுரேந்தர், ''நகரத்தை சுத்தமாக வைத்திருப்பதற்காக, சுகாதார பணிகளை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, மாநகராட்சியால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், எந்தவொரு சட்ட விதியையும் மீறவில்லை; அரசியலமைப்பிற்கு விரோதமானதும் அல்ல.

''எனவே, துாய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது. சென்னை மாநகராட்சி, ஒப்பந்ததாரர் நிறுவனத்துடன் கலந்துபேசி, துாய்மை பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்,'' என, உத்தரவிட்டிருந்தார்.

உத்தரவுக்கு தடை இந்த உத்தரவுக்கு தடை கோரியும், தீர்மானத்தை ரத்து செய்ய கோரியும், உயர் நீதிமன்றத்தில், உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சங்கம் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.குமாரசாமி ஆஜராகி, ''துாய்மை பணிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.

மாநகராட்சி தரப்பில், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடியும்வரை, துாய்மை பணியாளர்களுக்கு தற்காலிகமாக, ஏற்கனவே வழங்கப்பட்ட 761 ரூபாய் ஊதியத்தை தொடர்ந்து வழங்க ஒப்பந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது,'' என்றார்.

ஒப்பந்த நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி வாதிட்டதாவது:

தனி நீதிபதி உத்தரவுக்குப்பின், 800 பணியாளர்கள் பணியில் சேர்ந்தனர். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ததை அடுத்து, அவர்களும் பணிக்கு வர மறுக்கின்றனர்.

விசாரணை தள்ளிவைப்பு இதன் காரணமாக, 2,000 டன் குப்பை தேங்கி, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இனியும், அவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், வேறு ஆட்களை நியமிக்க வேண்டி வரும்; வேறு வழியில்லை. அதனால், துாய்மை பணியாளர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ''இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப் போவதில்லை. மேல்முறையீடு மனுவுக்கு, மாநகராட்சியும், ஒப்பந்த நிறுவனமும், அக்., 6க்குள் பதில் அளிக்க வேண்டும்,'' என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

மேலும், துாய்மை பணியாளர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்தும்படி, மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us