/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பருவமழை அதிகரித்தும் பூமிக்குள் தங்காத மழைநீர் 3 ஆண்டுகளில் மார்ச் மாதங்களில் நிலத்தடி நீர் சரிவு
/
பருவமழை அதிகரித்தும் பூமிக்குள் தங்காத மழைநீர் 3 ஆண்டுகளில் மார்ச் மாதங்களில் நிலத்தடி நீர் சரிவு
பருவமழை அதிகரித்தும் பூமிக்குள் தங்காத மழைநீர் 3 ஆண்டுகளில் மார்ச் மாதங்களில் நிலத்தடி நீர் சரிவு
பருவமழை அதிகரித்தும் பூமிக்குள் தங்காத மழைநீர் 3 ஆண்டுகளில் மார்ச் மாதங்களில் நிலத்தடி நீர் சரிவு
ADDED : ஏப் 23, 2024 12:20 AM

சென்னையில் பருவமழைக்குப் பின், ஜன., மற்றும் பிப்., மாதங்களை விட, மார்ச் மாதத்தில், 8 அடி வரை நிலத்தடி நீர் குறைந்துள்ளது. கடந்த 2022, 2023ம் ஆண்டு மார்ச் மாதங்களை ஒப்பிடும் போதும், 2024 மார்ச்சில், நிலத்தடி நீர் சரிந்துள்ளது. மழையின் அளவு அதிகரித்தாலும் பூமிக்குள் மழைநீர் தங்காததால், ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. ஆனாலும், ஏரிகளில் தேவைக்கு ஏற்ப நீர் உள்ளதால், சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
படிப்பு, வேலை என, பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து, சென்னை நோக்கி வருவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குடிநீர் தேவையும் அதிகரித்து வருகிறது.
மழை பொழிவு குறைவு
தினமும் 85 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படும். தற்போது, கோடைக்காலம் என்பதால், தினமும் 106 முதல் 107 கோடி லிட்டர் வரை வினியோகம் செய்யப்படுகிறது.
இதில், 104 கோடி லிட்டர், 5,500 கி.மீ., நீள குழாய் இணைப்பு வழியாகவும், 3 கோடி லிட்டர் லாரி வாயிலாகவும் வழங்கப்படுகிறது.
இந்த குடிநீர், ஐந்து ஏரிகள் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வழங்கப்படுகிறது. ஏரிகளில் இருந்து, 81.80 கோடி லிட்டர், விரிவாக்க பகுதி கிணறுகளில் இருந்து, 2 கோடி லிட்டர் மற்றும் மீஞ்சூர் மற்றும் நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் இருந்து, 23.3 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது.
இதுபோக, பல வீடு மற்றும் வணிக நிறுவனங்களில், ஆழ்துளை கிணறு வாயிலாக, நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
விரிவாக்க பகுதிகளில், குடிநீர் திட்டம் முழு வீச்சு அடையாததால், நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுகிறது. இதனால், தனியார் லாரி குடிநீர் பயன்பாடு அதிகரித்துள்ளது.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, மழைநீர் சேகரிப்பில் தொலைநோக்கு பார்வையின்மை, தண்ணீர் தேங்கும் கட்டமைப்புகளை முறையாக பராமரிக்காமை போன்ற காரணத்தால், நிலத்தடி நீர் போதிய அளவு பூமிக்குள் தங்குவதில்லை.
சென்னை மாநகராட்சி மணல், களிமண், பாறை கொண்ட அடுக்குகளை கொண்ட நிலப்பரப்பு. நிலத்தடி நீரை கணக்கிட 200 வார்டுகளிலும், நிலத்தடி நீர் அளவுமானிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாதமும், நிலத்தடி நீர் மட்டம் கணக்கிடப்படும். ஆண்டு சராசரி அளவில், 2021ம் ஆண்டை விட, 2022ம் ஆண்டில் 25 சதவீதம் மழை பொழிவு குறைவாக இருந்தது.
கடந்த ஆண்டு, வெயில் காலமான ஜூன் மாதம் முதல் அவ்வப்போது மழை பெய்தது.
இந்த வகையில், 2022ல், தென்மேற்கு பருவமழை, 44 செ.மீ.,யும், 2023ல் 78 செ.மீ.,யும் பெய்துள்ளது. அதேபோல், வடகிழக்கு பருவமழை, 2022ல் 92 செ.மீ.,யும், 2023ல் 18 சதவீதம் கூடுதலாக, 109 செ.மீ., மழையும் பெய்துள்ளது.
கடந்த ஆண்டு ஜன., - பிப்., - மார்ச் மாதங்களை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு மூன்று மாதங்களில், நிலத்தடி நீர் குறைந்துள்ளது. இந்த ஆண்டு, பிப்., மாதத்தை விட, மார்ச் மாதத்தில் மாதவரம் மண்டலத்தில், 8 அடி வரை நீர்மட்டம் குறைந்துள்ளது.
இதர மண்டலங்களில், 1, 2 அடி வீதம் குறைந்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட, இந்த மார்ச் மாதத்திலும், 2 முதல் 4 அடி வரை நீர்மட்டம் குறைந்துள்ளது.
கட்டமைப்பு தேவை
கடந்த, 2022ம் ஆண்டை விட, 2023ல் அதிக அளவு பருவமழை பெய்தும், பூமிக்குள் போதிய அளவு மழைநீர் தங்கவில்லை. இதனால், அடுத்த மாதம் குடிநீர் பயன்பாடு கணிசமாக அதிகரிக்கும் என, அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
சிமென்ட் சாலை, வடிகால், கால்வாய் என அமைக்கும் அனைத்து கட்டமைப்புகளும், பருவ மழைநீரை கடலில் சேர்க்கும் வகையில் உள்ளன. கடந்த நவ., மற்றும் டிச., மாதம் பெய்த மழைநீர், நான்கு நாட்கள் வரை தேங்கி நின்றும், பூமிக்குள் போதிய அளவு தங்கவில்லை.
இதனால், நிலத்தடி நீர் குறைந்து வருவது கவலை அளிக்கிறது. ஏரிகளில் தேவைக்கு ஏற்ப நீர் உள்ளதால், சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க முடியும். இருந்தாலும், மழைநீர் பூமிக்குள் இறங்கும் வகையில் கட்டமைப்புகளை மேம்படுத்துவது அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- -நமது நிருபர்- -

