UPDATED : ஏப் 10, 2024 10:06 PM
ADDED : ஏப் 10, 2024 09:04 PM

சாங்ஷா: பில்லி ஜீன் கிங் கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 0-3 என சீனாவிடம் தோற்றது.
சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் பெண்கள் அணிகளுக்கான பில்லி ஜீன் கிங் கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதன் 61வது சீசன் தற்போது சீனாவில் நடக்கிறது. ஆசிய/ஓசியானியா மண்டல பிரிவு தகுதிசுற்றில் இந்திய அணி முதல் போட்டியில் பசிபிக் ஓசியானியாவை வென்றது.
நேற்று இரண்டாவது போட்டியில் வலிமையான சீனாவை சந்தித்தது. முதலில் நடந்த ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சஹாஜா 2-6, 3-6 என ஜின்யுவிடம் வீழ்ந்தார். அடுத்த போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, 0-6, 0-6 என உலகின் 'நம்பர்-7' வீராங்கனை குயின்வென்னிடம் தோல்வியடைந்தார்.
இரட்டையர் பிரிவில் ருடுஜா, பிரார்த்தனா ஜோடி 1-6, 1-6 என தோற்றது. முடிவில் இந்திய அணி 0-3 என வீழ்ந்தது. இன்று மூன்றாவது போட்டியில் இந்தியா, சீன தைபே அணியை சந்திக்கிறது.

