/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மீண்டு வருவாரா சஞ்சு சாம்சன்: மூன்றாவது 'டி-20' போட்டியில் எதிர்பார்ப்பு
/
மீண்டு வருவாரா சஞ்சு சாம்சன்: மூன்றாவது 'டி-20' போட்டியில் எதிர்பார்ப்பு
மீண்டு வருவாரா சஞ்சு சாம்சன்: மூன்றாவது 'டி-20' போட்டியில் எதிர்பார்ப்பு
மீண்டு வருவாரா சஞ்சு சாம்சன்: மூன்றாவது 'டி-20' போட்டியில் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 24, 2026 11:13 PM

கவுஹாத்தி: மூன்றாவது 'டி-20' போட்டியில் கேப்டன் சூர்யகுமார் விளாசினால், இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றியுடன் தொடரை 3-0 என கைப்பற்றலாம்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு சவாலில் இந்தியா வென்றது. மூன்றாவது போட்டி இன்று அசாமின் கவுஹாத்தி, பர்சாபரா கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது.
சாம்சன் கவனம்: இந்திய அணிக்கு துவக்கத்தில் சஞ்சு சாம்சன் தடுமாறுவது பலவீனம். இவரால் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. கடந்த ஆண்டு இங்கிலாந்து 'டி-20' தொடரில் 5 முறை வேகங்களிடம் வீழ்ந்தார். தற்போதைய நியூசிலாந்து தொடரில் முதல் போட்டியில் (10 ரன்) ஜேமிசனிடம், 2வது போட்டியில் (6) மாட் ஹென்றி 'வேகத்தில்' வெளியேறினார். சுப்மன் கில்லை நீக்கிவிட்டு, துவக்க இடத்தை இவருக்கு கொடுத்துள்ளனர். அடுத்த மாதம் 'டி-20' உலக கோப்பை துவங்க உள்ள நிலையில், விரைவில் மீள வேண்டும். கடந்த போட்டியில் கீப்பராகவும் சாம்சன் ஏமாற்றினார். மற்றொரு கீப்பர்-பேட்டர் இஷான் கிஷான் அசத்தினார். இவரும் துவக்க இடத்தை குறி வைப்பதால், சாம்சனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
இது பற்றி இந்திய அணி முன்னாள் வீரர் டபிள்யு.வி.ராமன் கூறுகையில்,''காரை அனைத்து சமயத்திலும் ஒரே வேகத்தில் ஓட்ட முடியாது. இடத்தை பொறுத்து வேகத்தை மாற்ற வேண்டும். இதே போல பந்து வரும் வேகத்தை கணித்து பேட்டை 'அட்ஜெஸ்ட்' செய்து விளையாட வேண்டும். இதை சாம்சன் செய்ய தவறினால், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கடினம்,''என்றார்.
சூர்யா நம்பிக்கை: துவக்க வீரர் அபிஷேக் சர்மா கடந்த போட்டியில் ஜேக்கப் டபி பந்தில் 'கோல்டன் டக்' அவுட்டானார். இன்று அசத்த வேண்டும். 21 பந்தில் அரைசதம் எட்டிய இஷான் கிஷான் (76 ரன்), தனக்கு எதிரான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 'டி-20' அரங்கில் 23 இன்னிங்சிற்கு பிறகு அரைசதம் அடித்த கேப்டன் சூர்யகுமார் (82), 'மிஸ்டர் 360 டிகிரி' வீரராக ஜொலித்தார். இவர்களது வாணவேடிக்கை இன்றும் தொடர்ந்தால், இந்தியா தொடரை கைப்பற்றுவது உறுதி. 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங் பலம் சேர்க்கின்றனர்.
பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரன்னை கட்டுப்படுத்த வேண்டும். கடந்த போட்டியில் 'ரெஸ்ட்' கொடுக்கப்பட்ட பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பலாம். 'சுழலில்' அசத்த வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் உள்ளனர்.
வருகிறார் ஜேமிசன்: நியூசிலாந்து அணி இக்கட்டான நிலையில் உள்ளது. இன்று தோற்றால், தொடரை இழக்க நேரிடும். கான்வே, ரச்சின் ரவிந்திரா பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. நல்ல 'பார்மில்' உள்ள டேரில் மிட்சல் இன்று முன்னதாக களமிறக்கப்படலாம். கேப்டன் சான்ட்னர் 'சுழல்' எடுபடாதது பலவீனம். 'வேகத்தில்' ஜேக்கப் டபி, மாட் ஹென்றி கைகொடுக்கலாம். பால்க்ஸ் நீக்கப்பட்டு மீண்டும் ஜேமிசன் இடம் பெறலாம்.
மழை வருமா
கவுஹாத்தி ஆடுகளம் பேட்டர்களின் சொர்க்கபுரி. இரவு நேர பனிப்பொழிவு பவுலர்களுக்கு பாதகம்.
* கவுஹாத்தியில் இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை.
முதல் முறை
இரு அணிகளும் 27 'டி-20' போட்டிகளில் மோதின. இந்தியா 16, நியூசிலாந்து 10ல் வென்றன. ஒரு போட்டி 'டை' ஆனது. கவுஹாத்தியில் முதல் முறையாக மோத உள்ளன.

