ADDED : ஜூன் 21, 2025 12:50 AM
புதுச்சேரி : ஸ்ரீராம் இலக்கிய கழகம் நடத்தும் புதுச்சேரியில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இடையிலான திருக்குறள் பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டி அடுத்த மாதம் 20ம் தேதி நடக்கிறது.
மாணவ சமுதாயத்தினரிடையே திருக்குறளின் கருத்துகளைப் பரப்ப கடந்த 1988ம் ஆண்டு முதல் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் திருக்குறள் இலக்கிய போட்டிகளை நடத்தி வருகிறது.
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் இந்தாண்டு ஜூலை 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 24 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியரிடையே திருக்குறள் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்த இருக்கிறது.
இப்போட்டிகள், 12 மையங்களில் நடத்தப்படும். புதுச்சேரியில், ஜூலை 20ம் தேதி மறைமலை அடிகள் சாலையிலுள்ள செயின்ட் ஆண்டனிஸ் உயர்நிலைப் பள்ளியில் நடக்கிறது. புதுச்சேரி தவிர, சென்னை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை என பல்வேறு நகரங்களில் நடக்க உள்ளது.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இடைநிலை பிரிவில் போட்டிகள் நடத்தப்படும்.
ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மேல்நிலை பிரிவிலும், கல்லுாரி மாணவர்களுக்கு தனி என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது. ஏற்பாடுகளை ஸ்ரீராம் இலக்கிய கழகம் செய்து வருகிறது.
