ADDED : செப் 24, 2024 06:31 AM

பாகூர்: கிருமாம்பாக்கம் அரசு துவக்கப் பள்ளியில் எதிரே, சாலையில் குப்பைகள் குவிந்து கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட கிருமாம்பாக்கத்தில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவ-- மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியின் எதிரே பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், குப்பை தொட்டி வைக்கப்பட்டு, அதன் மூலமாக குப்பைகள் சேகரிக்கப்பட்டு வந்தது. குப்பை தொட்டி உடைந்து சேதமானது. மீண்டும் புதிதாக குப்பை தொட்டி வைக்காததால், திறந்த வெளியில் குப்பைகள் கொட்டி சேகரிக்கப்பட்டு வருகிறது.
அந்த குப்பைகளும் தினசரி முறையாக சேகரிப்படுவது கிடையாது. இதனால், அங்கு கொட்டப்படும் குப்பைகள் சாலை முழுவதும் சிதறி, அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகிறது.
குப்பைகள் கிடக்கும் உணவு பொருட்களுக்கான தெரு நாய்கள் சண்டையிட்டு கொண்டு, மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் அச்சுருத்தலை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, கிருமாம்பாக்கம் பள்ளி எதிரே திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

