/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிஜிட்டல் அரெஸ்ட் என கூறி ரூ. 73 லட்சம் மோசடி
/
டிஜிட்டல் அரெஸ்ட் என கூறி ரூ. 73 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 20, 2025 01:34 AM

புதுச்சேரி : புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் தலைமையில் மக்கள் மன்றம் நடந்தது.
எஸ்.பி., பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், ஏராளமானோர் பங்கேற்று, தங்களுடைய புகார் மற்றும் குறைகளை தெரிவித்தனர்.
அதில், புதுச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் அளித்த புகார்;
தன்னை தொடர்பு கொண்ட மர்மநபர், சி.பி.ஐ., அதிகாரி போல் பேசி, எனது ஆதார் கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கு துவங்கி, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடி நடத்திருப்பதாகவும், அதற்காக என்னை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாகவும் கூறினார்.
அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க 73 லட்சம் ரூபாய் அனுப்ப வேண்டும் என, மிரட்டினார். இதனால், பயத்தில் மர்மநபரின் வங்கிக் கணக்கிற்கு 73 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்து விட்டதாக தெரிவித்திருந்தது.
இதேபோல், மற்றொருவர் வாட்ஸ் ஆப்பில் வந்த பகுதி நேரவேலைவாய்ப்பு என்ற விளம்பரத்தை நம்பி, ஆன்லைனில் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்ததா புகார் அளித்தார்.அவர்களின் புகார்களை பெற்ற சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன், அதன்மீது உடனடியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்த இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும், பொதுமக்கள் தவறவிட்ட 5 லட்சம் மதிப்பிலான 20 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர், சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் கூறுகையில்,'சமூக வலைதளமான வாட்ஸ் ஆப், டெலிகிராம் குழுக்களில் தெரியாத நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான அறிவுரைகளை முற்றிலும் நம்ப வேண்டாம். மும்பை போலீஸ், சி.பி.ஐ., இருந்து பேசுவதாக கூறி தங்களுக்கு அழைப்புகள் வந்தால், உடனடியாக அந்த அழைப்பை துண்டிக்கவும்.
உடனடி கடன் பெறலாம் என வரும் விளம்பரத்தை நம்பி அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கடன் பெற வேண்டாம். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங்களில் வரும் வேலை வாய்ப்பு, ஆன்லைன் டிரேடிங், முதலீடு செய்யும் பணத்திற்கு இருமடங்காக பணம் தருகிறோம் என்ற விளம்பரங்களை முற்றிலும் நம்ப வேண்டாம்' என்றார்.

