/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'மதங்கள் மனித இனத்தை நல்வழிப்படுத்த வந்தவை'
/
'மதங்கள் மனித இனத்தை நல்வழிப்படுத்த வந்தவை'
ADDED : டிச 23, 2024 06:20 AM

புதுச்சேரி: புதுச்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள துாய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், சிறப்பு விருந்தினராக கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று, திருச்சபை சார்பில், ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் பரிசுகளை, ஏழை எளியோருக்கு வழங்கி, பேசியதாவது;
கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுடன் கலந்துரையாட இவ்விழா நல்ல வாய்ப்பு என்று நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இன்று தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில், சமூக வலைத்தளம் மூலம் நம்முடைய உறவினர்கள், நண்பர்கள், குழந்தைகள் எல்லோருக்கும் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.
மற்ற நாட்டு விழாக்களுக்கும், நம் நாட்டு விழாக்களுக்கும் வித்யாசம் நிறைய உள்ளது. இந்தியாவில் கொண்டாடப்படும் எந்த விழாவிலும் அனைத்து மதம், இனத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள முடியும். நாம் இந்தியர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையாக வாழ்கிறோம்.
மதங்கள் எல்லாமே மனித இனத்தை நல்வழிப்படுத்த வந்தவை. எந்த மதமாக இருந்தாலும் அது மனித சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டது. எந்த ஒரு மதத்தையும் மாற்றான் தாய் பார்வையோடு நாம் பார்ப்பது நம்முடைய மனித பண்பாட்டை நாம் இழிவு படுத்துவதாகும்.
நமது நாடு அனைத்து மதங்களையும் அனைத்து மதத்தினரின் உணர்வுகளையும் மதிக்கக் கூடிய சமத்துவ நாடாக இருக்கிறது.
நம்முடைய விழாக்களின் நோக்கம் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அன்பையும், கலாசாரத்தையும் பரிமாறிக் கொள்வது தான். நமக்குள்ளே இந்தியர் என்ற பெருமிதத்தை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.

