/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண் ஊழியர்களின் வேலை நேரம் இரவு 10 மணி வரை நீட்டித்து அரசு உத்தரவு
/
பெண் ஊழியர்களின் வேலை நேரம் இரவு 10 மணி வரை நீட்டித்து அரசு உத்தரவு
பெண் ஊழியர்களின் வேலை நேரம் இரவு 10 மணி வரை நீட்டித்து அரசு உத்தரவு
பெண் ஊழியர்களின் வேலை நேரம் இரவு 10 மணி வரை நீட்டித்து அரசு உத்தரவு
ADDED : நவ 10, 2025 03:19 AM
புதுச்சேரி: புதுச்சேரி தொழிற்சாலைகளில் பெண்கள் ஊழியர்கள் பணிபுரியும் நேரம் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணி நேரத்தை 1948ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தொழிற்சாலை சட்டம் வரையறை செய்துள்ளது. அதன்படி, எந்தவொரு பெண் ஊழியரும் காலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை மட்டுமே தொழிற்சாலைகளில் பணிபுரிய முடியும். அதன் பிறகு இரவு நேரங்களில், தொழிற்சாலைகளில் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இதுபோன்ற சூழ்நிலையில் பணியிடத்தில் பாலின சமத்துவத்தை பேணும் வகையில், பெண் ஊழியர்களுக்காக தொழிற்சாலை சட்டத்தில் உள்ள சில கட்டுப்பாட்டு விதிகளை புதுச்சேரி அரசு தளர்த்தி உள்ளது.
அதன்படி, மாநிலத்தில் இனிபெண் ஊழியர்கள் இரவு 10:00 மணி வரை பணி புரியலாம் என, புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை வாயிலாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தொழிலாளர் துறை செயலர் ஸ்மிதா கூறியதாவது:
தொழிற்சாலைகளில் இதற்கு முன், பெண் ஊழியர்கள் இரவு 7:00 மணி வரை மட்டுமே வேலை செய்ய முடியும்.
இனி பெண் ஊழியர்கள் எந்தவொரு தொழிற்சாலை அல்லது தொழில்துறையிலும் இரவு 10:00 மணி வரை வேலை செய்யலாம். இதன் மூலம், தொழிற்சாலைகளில் இரவு நேரப் பணிகளின் பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் வேலை தொடர்பான நெகிழ்வுத்தன்மையை அதிகரித்துள்ளது.
பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனைப் பேணுவதோடு, சம வாய்ப்புகளை ஊக்குவித்தல், பாலின சமத்துவத்தை உறுதி செய்தல், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார பங்களிப்பை செயல்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு புதுச்சேரி அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிலையான பொருளாதார வளர்ச்சி, தொழில் முனைவோர் ஊக்கம், அதிக வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.பெண் ஊழியர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இது போன்ற, நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுப்பதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது' என்றார்.

