ADDED : ஏப் 22, 2026 06:03 AM

புதுச்சேரி: புதுச்சேரி பிரெஞ்சு சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நோணாங்குப்பம் உதவிக் கரங்கள் சங்க கருத்தரங்க கூடத்தில் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமரன் தலைமைத் தாங்கினார். முனைவர் அருண் நாகலிங்கம் வரவேற்றார். ரோட்டரி சங்கத்தின் தலைவர் பரிமளம் முகாமை துவக்கி வைத்தார். சமூக செயற்பாட்டாளர்கள் கார்த்திகேயன், பாஸ்கரன் மற்றும் வேல்முருகன் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி அரசின் சிறுவர் நலக்குழு முன்னாள் உறுப்பினர் எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி கலந்து கொண்டு போதைப் பொருள் தடுப்பு, தன்னம்பிக்கை, கல்வி, அறிவு, ஒழுக்கம், உயர் எண்ணம், போட்டித் தேர்வு எழுதும் முறைகள், உயர்கல்வி மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் முறைகள், தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுதல், வாசிப்புப் பழக்கம், பேச்சு, எதிர்காலம் குறித்து திட்டமிடுதல் மற்றும் இலக்குகளை அடையும் முறைகள் குறித்து பயிற்சியளித்தார்.
தொடர்ந்து, மாணவர்களிடையே நேர்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சங்கத்தின் சார்பாக நேர்மை அங்காடி திறந்து வைக்கப்பட்டது.
உதவும் கரங்கள் வார்டன் சசிகுமார் நன்றி கூறினார். தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
