ADDED : ஏப் 26, 2026 09:04 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள இந்திய கடலோர காவல்படையின் மாவட்ட தலைமையகத்திற்கான புதிய நிர்வாக வளாக கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது.
உப்பளம், மீன்பிடித் துறைமுகம் அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய நிர்வாக வளாகத்தை இந்திய கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி தலைமை தாங்கி, திறந்து வைத்தார்.
இந்த புதிய நிர்வாக வளாகம் 'நவீன படை, நவீன உள்கட்டமைப்பு' என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் செயல்பாட்டுத் திறனையும், நிர்வாகத் திறனையும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு, மேம்பட்ட செயல்பாட்டு மையம் மற்றும் கடல்சார் மீட்பு துணை மையம் ஆகியவை இணைந்து கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்புக்கான ஒரு ஒருங்கிணைந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த மையம் உள்கட்டமைப்பு, புதிதாக உருவாகும் கடல்சார் சவால்களுக்கு உடனடியாகவும், திறமையாகவும் பதிலளிக்க உதவும்.
இந்த கடலோரக் காவல்படை மாவட்டத் தலைமையகம் எண் 13, புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய 140 கடல் மைல் பரப்பளவிலான, கடல் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், கடல்சார் சூழலைப் பேணுவதிலும், இந்தியாவின் கடல்சார் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
விழாவில், கடலோர காவல்படை புதுச்சேரி மற்றும் மத்திய தமிழக அதிகாரிகள், போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
