ADDED : அக் 02, 2024 03:03 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் சாலையில் திரியும் யாசகர்களுக்கு கண்ணியமான தொழிலை செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
யாசகர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்தும் முகமை நிறுவனமாக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட சாரோன் சொசைட்டி புதுச்சேரி நிறுவனம், சமூக நலத்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், சாலைகளில் திரியும் யாசகர்கள், கோரிமேடு தேசிய நகர்ப்புற மறுவாழ்வு இல்லத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு யாசக தொழிலை விட்டு விட்டு கண்ணியமான தொழிலுக்கு சென்று தன்னிறைவுடன், கவுரவமாக வாழ்வதற்கான பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல்களை சமூக நலத்துறை இயக்குனர் ராகினி வழங்கினார்.
சமூக நலத்துறை துணை இயக்குனர் ஆறுமுகம், கள அதிகாரி கருணாநிதி, மேற்பார்வையில் சாரோன் சொசைட்டி ஆப் புதுச்சேரி தலைவர் மோகன் தலைமையில் அதன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திட்டத்தை அமல்படுத்தினர்.

