பொது மேடையில் விவாதிக்க தயாரா? தி.மு.க.,விற்கு காங்., கட்சி சவால்
பொது மேடையில் விவாதிக்க தயாரா? தி.மு.க.,விற்கு காங்., கட்சி சவால்
ADDED : ஜூன் 07, 2026 09:53 PM
புதுச்சேரி: தேர்தல் தோல்வி விஷயத்தில் பொது விவாதத்திற்கு தயாரா என, தி.மு.க.,விற்கு முன்னாள் துணை சபாநாயகர் பாலன் சவால் விடுத்துள்ளார்.
அவர், கூறியதாவது: என்.ஆர்.காங்., கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்த காங்., கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என, தி.மு.க., அமைப்பாளர் சிவா கூறியிருக்கிறார். இதை புதுச்சேரி காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.
அப்படி பாராட்டு விழா நடத்த வேண்டும் என்றால் இண்டி கூட்டணியை சிதைக்கிற வகையில் முதன்முதலில் காங்., தவிர்த்து, இண்டி கூட்டணி கூட்டத்தை நடத்திய தி.மு.க.,வுக்கு தான் நடத்த வேண்டும். குறிப்பாக சிவாக்கு தான் நடத்த வேண்டும்.
அவர் காங்., கட்சியை ஓடாத வண்டி, ஓட்ட வண்டி என, விமர்சனம் செய்தார். இப்படி இவர்கள் பேசி இரு கட்சியினருடைய மனதில் கசப்புணர்வை ஏற்படுத்தினர். கடந்த 5 ஆண்டுகளாக எதிர்கட்சித் தலைவராக இருந்து செயல்படாமல், முதல்வரோடு கூட்டுச் சேர்ந்து பேட்டி கொடுத்தார்.
கூட்டணியில் குழப்பத்தை எற்படுத்தி என்.ஆர்., – பா.ஜ., ஆட்சி வருவதற்கு முதல் காரணமாக இருந்தவர், இன்று முதல்வருக்கு 6 புரோக்கர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார். ஐந்து ஆண்டுகளாக எதிர்கட்சித் தலைவராக இருக்கும் போது, பேசாததை, தோல்விக்குப் பிறகு பேசுகிறார்.
காங்., கட்சியை பற்றி பேசுவதை சிவா நிறுத்தி கொள்ள வேண்டும். இதுக்கு மேல அவர் பேசுவதாக இருந்தால் மேடையில் பொது விவாதத்திற்கு வரலாம். நாங்களும் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் விவாதிக்கத் தயாராக இருக்கிறோம்’ என்றார்.
