ADDED : செப் 14, 2024 06:11 AM

புதுச்சேரி: பொம்மை உற்பத்தியாளர்கள் சேவை தொழிலியல் கூட்டுறவு சங்கம் சார்பில், கொலு பொம்மை கண்காட்சி நேற்று துவங்கியது.
புதுச்சேரி பொம்மை உற்பத்தியாளர்கள் சேவை தொழிலியல் கூட்டுறவு சங்கம் சார்பில், 30 வது ஆண்டு கொலு பொம்மை விற்பனை மற்றும் கண்காட்சி ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடக்கிறது. 30 நாட்கள் நடக்கும் இக்கண்காட்சியின் துவக்க விழா நேற்று நடந்தது.
கண்காட்சியினை அமைச்சர் லட்சுமிநாராயணன் திறந்து வைத்து , முதல் விற்பனையை துவக்கி வைத்தார். கூட்டுறவுத்துறை செயலர் நெடுஞ்செழியன், கூட்டுறவு சங்க பதிவாளர் யஷ்வந்தயா முன்னிலை வகித்தனர்.
துணை பதிவாளர் முரளி, மத்திய கைவினை அபிவிருத்தி ஆணையம் உதவி இயக்குனர் வினோத்குமார், கலைமாமணி சரோஜா திருநாவுக்கரசு, பொம்மை உற்பத்தியாளர்கள் சங்கம் முதுநிலை ஆய்வாளர் மமுல் வாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் அயோத்தி ராமர், மாவிளக்கு பூஜை செட், பெண் பார்க்கும் படலம், பாகு விநாயாகர், அம்மன் கோல செட், பெருமாள் கும்பாபி ேஷகம், வராகி அஷ்டலட்சுமி, அஷ்ட பைரவர், 50க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மேலும் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள கொலு பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
நேற்று துவங்கிய கண்காட்சி வரும் 12.10.2024 வரை நடக்கிறது.
