சொற்ப எண்ணிக்கையில் கூடும் தொண்டர்கள்: இபிஎஸ் நடவடிக்கையால் கடும் அதிருப்தி
சொற்ப எண்ணிக்கையில் கூடும் தொண்டர்கள்: இபிஎஸ் நடவடிக்கையால் கடும் அதிருப்தி
UPDATED : நவ 08, 2025 03:38 AM
ADDED : நவ 08, 2025 12:53 AM

உட்கட்சி குழப்பம், சரியான கூட்டணி அமையாத நிலை போன்ற காரணங்களால், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை, அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் இழந்து விட்டதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அ.தி.மு.க., கடந்த ஏப்ரல் 11ல், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, கூட்டணியை வலுப்படுத்தப் போவதாக அறிவித்தது. ஆனால், ஏழு மாதங்களாகியும் கூட்டணிக்கு, புதிதாக எந்தக் கட்சியும் வரவில்லை.
பா.ம.க., பிளவுபட்டுஉள்ளது. தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., பேசி வருகிறது. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது.
விஜய் கூட்டணிக்கு வருவார் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சூசகமாக தெரிவித்திருந்தார்.
ஆனால், கடந்த 5ம் தேதி நடந்த த.வெ.க., பொதுக்குழுவில், 'தி.மு.க., -- த.வெ.க., இடையே தான் போட்டி; விஜய் தான் முதல்வர் வேட்பாளர்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மான செய்தி இதனால், விஜய் எப் படியும் கூட்டணிக்கு வந்து விடுவார் என்ற கடைசி நம்பிக்கையும் தகர்ந்துள்ளதால், கட்சியின் எதிர்காலம் குறித்து அ.தி.மு.க.,வினருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
த.வெ.க., பொதுக்குழு நடந்த அதே நாளில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்தது.
அப்போது தான், 'விஜய் தான் முதல்வர் வேட்பாளர்' என்ற த.வெ.க., தீர்மான செய்தி வந்தது.
கூட்டத்தில் பேசிய பழனிசாமி, 'வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளில், தி.மு.க., முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது; அதை தடுத்து நிறுத்துங்கள். வரும் தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்போம்' என, நம்பிக்கையூட்டினார்.
ஆனாலும், கூட்டம் முடிந்து வெளியே வந்த மாவட்ட செயலர்கள் உற்சாகமிழந்து காணப்பட்டனர்.
அவர்கள் கூறியதாவது:
கடந்த 2011 வரை நடந்த தி.மு.க., ஆட்சி மீது பெரிய அளவில் மக்கள் மத்தியில் எதிர்ப்பு இல்லாத நிலையில், 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தோற்கும் என்றே பலரும் கருதினர்.
ஆனால், அனைவரையும் அரவணைத்து தேர்தலை ஜெயலலிதா எதிர்கொண்டார். முத்துசாமி கட்சியை விட்டு வெளியேறியபோது, அவருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார். தனக்கு விருப்பம் இல்லாதபோதும் தி.மு.க.,வை தோற்கடிக்க, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்தார்.
எதிர்காலம் ஆனால், இப்போது தலைகீழாக நடக்கிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டோர், கட்சி ஒன்றிணைய குரல் எழுப்பும்போதும், அதை ஏற்க மறுக்கிறார் பழனிசாமி. ஆனால், அவர்களால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும், அவர்களை ஏற்க மறுக்கிறார்.
இந்நிலையில், கூட்டணிக்கு த.வெ.க., வரும் என்ற நம்பிக்கை இருந்தது. அக்கட்சியின் பொதுக்குழு தீர்மானத்தை அடுத்து, அந்த நம்பிக்கையும் போய் விட்டது. இனி, பா.ம.க., - அன்புமணியுடன் மட்டுமே கூட்டணிக்கான வாய்ப்பு உள்ளது . அதெல்லாம் எந்தளவுக்கு வெற்றியை பெற்று தரும் என தெரியவில்லை.
வழக்கமாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தலைமை கழகம் வருகிறார் என்றால், சென்னை மாவட்டத்தைச் சுற்றியுள்ள அ.தி.மு.க., பிரமுகர்கள் தலைமை கழகத்தில் கூடி நின்று வரவேற்பர். சமீப காலமாக, அப்படி கூடுவோரின் எண்ணிக்கை சொற்பமாகி விட்டது. இந்த சூழலில், கட்சிக்கான எதிர்காலம் குறித்து நினைத்தாலே பதற்றமாக இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-- நமது நிருபர் -

