அதிகாரிகள் அனுமதி மறுப்பால் த.வெ.க.,வுக்கு தொடரும் சிக்கல்
அதிகாரிகள் அனுமதி மறுப்பால் த.வெ.க.,வுக்கு தொடரும் சிக்கல்
ADDED : மார் 28, 2026 05:57 AM

சென்னை: த.வெ.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதும், அக்கட்சி தலைவர் விஜய் சுற்றுப்பயணமும், தேர்தல் கமிஷன் அனுமதி கிடைக்காததால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
த.வெ.க., தலைவர் விஜய், கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இதன்பின், விஜயின் சுற்றுப்பயணத்துக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதேபோல், 5,000 பேருக்கு மேல் பங்கேற்கும் கட்சி கூட்டங்களுக்கு, அரசின் சார்பில், புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. அனைத்து கட்சிகளும் ஒப்புதல் அளித்தபோதிலும், இந்த வழிகாட்டு நெறிமு றைகளை, த.வெ.க., மட்டும் கடுமையாக எதிர்த்தது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று, வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சிக்கு த.வெ.க., ஏற்பாடு செய்தது. அதேபோல், சென்னையில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில், அவரது பிரசாரத்தை இன்று துவக்கவும் திட்டமிடப்பட்டது.
ஆனால், தேர்தல் கமிஷன் அனுமதி கிடைக்காததால் த.வெ.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு, நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
த.வெ.க., நிர்வாகிகள் கூறியதாவது: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் த.வெ.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு நிகழ்ச்சி நடத்த நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், 48 மணி நேரத்துக்கு முன்பாக, தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்பது எங்களுக்கு தெரியாது.
இதனால், ஏற்பாடு நடத்தும் இடத்துக்கு வந்த அதிகாரிகள், 'அனுமதி இல்லாமல் நிகழ்ச்சி நடத்தினால், ஹோட்டலை சீல் வைத்து விடுவோம்' என சொல்லி விட்டனர்.
இதையடுத்து, நுங்கம்பாக்கம் ஹோட்டலில் ஏற்பாடு செய்ய, அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், காவல் துறை தடையில்லா சான்றிதழ் தர தாமதமாகி விட்டது. இதனால், நேற்று நிகழ்ச்சி நடத்தவில்லை.
இப்போது, நாளை நிகழ்ச்சி தேதி நடத்த அனுமதி வாங்கியுள்ளோம். அதன்படி, அன்றைய தினம் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
பெரம்பூரில் விஜய் பிரசார திட்டத்துக்கு, 25ம் தேதியே தேர்தல் கமிஷனிடம் மனு அளிக்கப்பட்டுவிட்டது. 3,000 பேருக்கு மேல் அந்த இடத்தில் நிற்க முடியாது என, அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர். இதனால், அண்ணா நகர், வில்லிவாக்கம், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளிலும் விஜயால் பிரசாரம் செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
