உயரழுத்த பிரிவு மின் உற்பத்தி, பயன்பாடு சரிபார்க்கும் முறையில் வருகிறது மாற்றம்
உயரழுத்த பிரிவு மின் உற்பத்தி, பயன்பாடு சரிபார்க்கும் முறையில் வருகிறது மாற்றம்
ADDED : ஏப் 24, 2024 05:32 AM

சென்னை : உயரழுத்த பிரிவு மின் உற்பத்தி, கொள்முதல் மற்றும் பயன்பாடு ஒரே நிலையில் இருக்க வேண்டும் என்ற புதிய நடைமுறையை மின் வாரியம் அமல்படுத்த உள்ளது. தற்போது, மாதம்தோறும் அதை சரிபார்ப்பதை மாற்றி, 15 நிமிடத்திற்கு ஒரு முறை சரிபார்க்கும் நடைமுறை வர உள்ளது. இதற்கு தொழில் துறையினரிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில், ஜவுளி, நுாற்பாலை உள்ளிட்ட அதிக மின்சாரம் பயன்படுத்தும், 11,000 உயரழுத்த பிரிவு மின் நுகர்வோர் உள்ளனர். பல நிறுவனங்கள் தங்களின் மின் தேவையை பூர்த்தி செய்ய சொந்தமாக காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களை அமைத்துள்ளன. இது தவிர, மின்சார சந்தையிலும் மின்சாரம் வாங்குகின்றன.
இந்த மின்சாரம், மின் வாரியத்தின் மின் வழித்தடங்களில் எடுத்து செல்லப்படுகிறது. இதற்காக அந்நிறுவனங்கள், மின் வாரியத்திற்கு உரிய கட்டணங்களை செலுத்துகின்றன.
நிறுவனங்களின் மின் உற்பத்தி, மின் கொள்முதல் மற்றும் பயன்பாடுகளை, ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் சரிபார்த்து, ஒரே நிலையில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம், புதிய நடைமுறையில் எழுந்துள்ளது.
இதற்காக, அதை சரிபார்க்கும் முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி, மின் வாரியம் மாதத்திற்கு ஒரு முறை சரிபார்ப்பதை, ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் சரிபார்க்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.
இதற்கு, தொழில் துறையினரிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக நுாற்பாலைகள் சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:
உயரழுத்த பிரிவினரின் மின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டு விபரம், ஏ.எம்.ஆர்., எனப்படும் ஆளில்லாமல் கணக்கெடுக்கும் மீட்டரில் மாதத்திற்கு ஒரு முறை சரிபார்க்கப்படுகிறது. இன்னும் பல இடங்களில், 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்தப்படவில்லை; இந்த மீட்டரில் தான், 15 நிமிடத்திற்கு பயன்படுத்தும் மின்சார அளவு தெரியவரும்.
மின் உற்பத்தி, மின் கொள்முதல் மற்றும் பயன்பாடு ஒரே சீராக இல்லை எனில் அபராதம் விதிக்க வாய்ப்பிருக்கிறது.
ஏற்கனவே, தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது, மேலும் சுமையை ஏற்படுத்தும்.
எனவே, இந்த விவகாரத்தில், தொழில் துறையினருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றம் வாயிலாக தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

