ஐகோர்ட் உத்தரவை மீறி முளைக்கும் செங்கல் சூளைகள்: ஆளும்கட்சியினர் நடத்துவதால் அதிகாரிகள் அமைதி
ஐகோர்ட் உத்தரவை மீறி முளைக்கும் செங்கல் சூளைகள்: ஆளும்கட்சியினர் நடத்துவதால் அதிகாரிகள் அமைதி
ADDED : மே 08, 2024 02:57 AM

ஐகோர்ட் உத்தரவை மீறி, ஆளும்கட்சியினரின் ஆதரவுடன் கோவையில் புதிய செங்கல் சூளைகள், அனுமதியின்றி இரவு பகலாக இயங்கி வருகின்றன.
கோவை நகருக்கு அருகில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள தடாகம் பள்ளத்தாக்குப் பகுதியில், அனுமதியின்றி செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. இதற்காக, அரசு மற்றும் தனியார் பட்டா நிலங்களில், பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் மண் கொள்ளை நடந்து வந்தது.
அதனால் ஏற்பட்ட சூழல் பாதிப்புகள் மற்றும் சட்டவிதிமீறல்கள் குறித்து, 'தினமலர்' நாளிதழில் தொடர் கட்டுரை வெளியிடப்பட்டது.
அந்த கட்டுரையை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தெற்கு மண்டலக் கிளை, தாமாக முன் வந்து வழக்காகப் பதிவு செய்தது. தீர்ப்பாயம் மற்றும் ஐகோர்ட் உத்தரவுகளின்பேரில், மாவட்டத்திலுள்ள 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் மூடி 'சீல்' வைக்கப்பட்டன. அனைத்து சூளைகளின் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.
இவை மூடப்பட்டு, மூன்று ஆண்டுகளான நிலையில், தடாகம் பகுதியில் சூழல் தன்மையும் மீட்கப்பட்டு, கடந்த ஆண்டில் மழை அதிகரித்தது. ஐகோர்ட் மற்றும் பசுமைத் தீர்ப்பாயத்தில், செங்கல் சூளைகள் தொடர்பான வழக்குகள் நடந்து வரும் நிலையில், இவற்றை மீண்டும் இயக்குவதற்கு அனுமதி கோரி, அரசியல் ரீதியாகவும், நிர்வாகரீதியாகவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வாக்குறுதி
இந்த விவகாரத்தில், அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், முக்கியக் கட்சிகள் அனைத்துமே, செங்கல் சூளைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளன.
இதற்கிடையில், மலையிட பாதுகாப்புக்குழுமத்துக்கு (ஹாகா) உட்பட்ட தொண்டாமுத்துார் சுற்று வட்டார கிராமங்களில், அனுமதியற்ற செங்கல் சூளைகள் புதிதாக முளைத்து வருகின்றன. வடிவேலம்பாளையம், குப்பனுார், கரடிமடை, சென்னனுார், மத்திப்பாளையம் ஆகிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள், ஜெனரேட்டர் உதவியுடன் இரவு பகலாக இயக்கப்படுகின்றன.
செங்கல் தயாரிப்புக்காக, சுற்று வட்டாரப் பகுதிகளில், அனுமதியின்றி மண் அள்ளும் விதிமீறலும் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் செங்கல் தயாரிப்புப் பணி நடக்கிறது. இங்கிருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் கொண்டு சென்று விற்கப்படுகின்றன.
அனுமதியின்றி இயக்கப்படும் இந்த செங்கல் சூளைகளின் பின்னணியில், ஆளும்கட்சியினர் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகி ஒருவர், மூன்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் நடத்துவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதேபோல, நாட்டுச் செங்கல் சூளைகளும் அதிகளவில் முளைத்து வருகின்றன.
அத்துமீறல்
கிணத்துக்கடவு சுற்று வட்டாரப் பகுதிகளில், சமீபமாக நாட்டுச் செங்கல் சூளைகள் அதிகரித்துள்ளன. வழுக்குப்பாறை, சட்டக்கல் புதுார், பெரும்பதி ஆகிய பகுதிகளில், இந்த செங்கல் சூளைகளை, கேரளாவைச் சேர்ந்த பலரும் நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. வருவாய்த்துறை, கனிம வளத்துறை ஆகிய துறைகளின், கீழ்மட்ட ஊழியர்களும், ஆளும்கட்சியினரும், இந்த செங்கல் சூளைகளில் பணம் வாங்கிக் கொண்டு, ஆதரவு அளித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இப்பகுதிக்கான தி.மு.க., மாவட்ட நிர்வாகிக்கு, இந்த செங்கல் சூளைகளிலிருந்து மாதந்தோறும் பெருமளவு மாமூல் செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கலெக்டர் வரைக்கும் இதுபற்றி பலரும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தல் பணிகளில் அதிகாரிகள் இருப்பதைப் பயன்படுத்தி, இந்த அத்துமீறல் அதிகரித்துள்ளது அப்பட்டமாகத் தெரிகிறது.
ஐகோர்ட் உத்தரவை மீறும் இந்த அத்துமீறலுக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது கலெக்டரின் கடமை.
-நமது சிறப்பு நிருபர்-

