காங்.,கில் இளங்கோவன் பேத்தி ஈரோடு கிழக்கில் போட்டி?
காங்.,கில் இளங்கோவன் பேத்தி ஈரோடு கிழக்கில் போட்டி?
ADDED : டிச 22, 2025 03:01 AM

மறைந்த முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பேத்தி சமனா, டில்லியில் சோனியா முன்னிலையில், காங்கிரசில் இணைந்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக மூன்று முறை, ஒரு முறை மத்திய அமைச்சராக, இரண்டு முறை எம்.எல்.ஏ., வாக இருந்தவர் இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈ.வெ.ரா., கடந்த 2021 சட்டசபை தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில், போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
உடல் நலக்குறைவு காரணமாக, அவர் இறந்ததும், அத்தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரும் உடல்நலக்குறைவு காரணமாக இறந்ததும், நடந்த இடைத்தேர்தலில், இளங்கோவன் குடும்ப உறுப்பினர் ஒருவரை நிறுத்துமாறு அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.
ஆனால், அத்தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்காமல், தி.மு.க., சார்பில், சந்திரமோகன் நிறுத்தப்பட்டு, வெற்றி பெற்றார். காங்., தொகுதியை, தி.மு.க., பறித்து விட்டதாக, டில்லி மேலிடத்தில், தமிழக காங்கிரசார் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, வரும் சட்டசபை தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு கேட்கவும், இளங்கோவன் குடும்பத்தை சேர்ந்தவரை களமிறக்கவும் காங்கிரஸ் டில்லி மேலிடம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இளங்கோவன் பேத்தியும், திருமகன் ஈ.வெ.ரா., மகளுமான சமனா, டில்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார். அப்போது, ராகுல், பிரியங்கா ஆகியோர் உடன் இருந்தனர். இளங்கோவன் பிறந்தநாளையொட்டி, காங்கிரசில் சமனா இணைந்த அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது.
- நமது நிருபர் -

