UPDATED : ஏப் 21, 2024 03:14 AM
ADDED : ஏப் 21, 2024 03:12 AM

புன்செய்புளியம்பட்டி : ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில், 600 ஆண்டு பழமை வாய்ந்த, டணாய்க்கன் கோட்டை மாதவராய பெருமாள் கோவில், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோவில்கள், உள்ளன.
அணை கட்டுமான பணிக்கு முன்னதாக அப்பகுதியில் வசித்து வந்த மக்களின், வழிபாட்டு தலமாக அவை திகழ்ந்தன. பணி துவங்கியபோது நீர்த்தேக்க பகுதியில் வசித்த கிராம மக்கள், பவானிசாகர் சுற்றுவட்டாரத்தில் குடியேறினர்.
கோவிலில் இருந்த சிலைகளை எடுத்து வந்து, பவானிசாகரில் கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் கோவில் கட்டி பிரதிஷ்டை செய்தனர். ௧955ல் கட்டுமானப்பணி முடிந்தபின், முழுதும் கற்களால் கட்டப்பட்ட கோவில் மற்றும் மண்டபங்கள் அணை நீரில் மூழ்கின. காலப்போக்கில் சிதிலமடைய தொடங்கின.
![]() |
அணை நீர்மட்டம், ௫௦ அடிக்கு கீழ் குறையும்போது, டணாய்க்கன் கோட்டை மாதவராய பெருமாள் கோவில், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோவில்கள் வெளியே தெரியும். தற்போது நீர்மட்டம், 46 அடியாக சரிந்துள்ளதால், மாதவராய பெருமாள் கோவில் முழுதுமாக காட்சியளிக்கிறது.
பார்வையிட தடை
பவானிசாகர் அணை பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், அணை மீதும் நீர்த்தேக்க பகுதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் தெரியும் டணாய்க்கன்கோட்டைக்கு பரிசல் மற்றும் இயந்திரப்படகில் பார்வையாளர்களை ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை. அவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் பரிசல் பறிமுதல் செய்யப்படும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்' என, எச்சரித்துள்ளனர்.


