மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் வேகம்; ஒற்றை செங்கல் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் வேகம்; ஒற்றை செங்கல் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி
ADDED : ஏப் 14, 2024 11:32 PM

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் வேகமெடுத்துள்ளதால், ஒற்றை செங்கல் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை, தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு, 2018ல் ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்திற்கு, 1,264 கோடி திட்ட மதிப்பீட்டில், 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
முதற்கட்டமாக சுற்றுச்சுவர் கட்டும் பணி நிறைவடைந்தது. இதே வளாகத்தில், 150 படுக்கை கொண்ட தொற்று நோய் பிரிவை துவக்க திட்டமிட்டதால், திட்ட மதிப்பீடு, 1977.80 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.
மதிப்பீட்டில், 82 சதவீதமாக, 1,627.70 கோடி ரூபாயை ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனமான ஜெய்காவிடம் கடன் பெறுவதற்கு 2021 மார்ச்சில் கையெழுத்தானது. மீதமுள்ள, 18 சதவீத தொகையை மத்திய அரசு வழங்கும் என, தெரிவிக்கப்பட்டது.
கீழ் தளம், தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன், 870 படுக்கை வசதிகளுடன், அவசர சிகிச்சை பிரிவு, தொற்று நோய் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய பிரதான கட்டடமும், நான்கு தளங்களில், 30 படுக்கைகளுடன் ஆயுஷ் மருத்துவ பிரிவும் அமைய உள்ளது.
ஏழு தளங்களுடன் மருத்துவக்கல்லுாரி அமையவுள்ளது. மேலும், பிரம்மாண்ட அரங்கம், இளநிலை மற்றும் முதுநிலை மாணவ - மாணவியருக்கு தனி விடுதி வசதி என மொத்தம், 2 லட்சத்து 851 சதுர மீட்டர் பரப்பளவில் எய்ம்ஸ் வளாக கட்டடம் கட்டப்படவுள்ளது.
சுற்றுச்சுவர் கட்டப்பட்டு ஐந்தாண்டுகளான நிலையில், 2023, ஆக., 17ல் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது.
ஜெய்கா நிறுவனத்திடமிருந்து கடன் தொகை பெற்றதால், 33 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறையின் ஒப்புதலுக்கு பின், எல் அண்டு டி கட்டுமான நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டது. இந்நிறுவனம், 2024 மார்ச் 14ல் கட்டுமான பணிகளை துவக்கியது.
தற்போது வரை அமைச்சர் உதயநிதி ஒற்றை செங்கல்லை காட்டி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வராது என பிரசார கூட்டத்தில் தெரிவித்து வரும் நிலையில், எய்ம்ஸ் கட்டுமான பணிகள் வேகமடைந்துள்ளன.
இது தொடர்பான புகைப்படங்கள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பான விபர அறிக்கையை அந்நிறுவனம், 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ளது. இனிமேல் ஒற்றை செங்கல்லுக்கும், உதயநிதிக்கும் வேலை இருக்காது என, பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.

