1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த 3 கொற்றவை சிற்பங்கள் கண்டுபிடிப்பு
1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த 3 கொற்றவை சிற்பங்கள் கண்டுபிடிப்பு
UPDATED : ஜன 15, 2026 04:38 PM
ADDED : ஜன 15, 2026 04:39 PM

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சிறுவாக்கூர் கிராமத்தில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்றவை சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:
விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கல்பட்டு, சிறுவாக்கூர் கிராமத்தில் கள ஆய்வு செய்தபோது வயல்வெளியில் 2 சிற்றாலயங்களில் 3 கொற்றவை சிற்பங்கள் தனித்தனியே இருப்பதை கண்டறிந்தோம்.
இந்த சிற்பங்கள், 5 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. பல்லவர் கலை பாணியில் கொற்றவை அழகாகவும் கம்பீரமாகவும் காட்சித்தருகிறாள். காதணிகள், கழுத்தணி, கை வளையல்கள் அழகு அணிகலன்களாக காணப்படுகின்றன.
இடையில் குறுவாள் ஒன்று இருப்பது கூடுதல் சிறப்பாகும். இந்த சிற்பங்கள் 1200 ஆண்டுகளைக் கடந்தும் வழிபாட்டில் இருந்து வருகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் அரசூர், ஏமப்பேரூர், மொளசூர், சிங்கவரம், ஆசூர் உள்ளிட்ட இடங்களில் தலா இரண்டு கொற்றவை சிற்பங்கள் அமைந்துள்ளன. தற்போது ஒரே ஊரில் 3 கொற்றவை சிற்பங்கள் சிறுவாக்கூரில் கண்டறியப்பட்டுள்ளன.
இவ்வவாறு செங்குட்டுவன் கூறினார்.
ஆய்வின்போது விழுப்புரம் மணிகண்டன், அண்ணாதுரை, ராகுல்ஆனந்த், தமிழழகன், சித்தார்த்தன் உடனிருந்தனர்.

