ஆஸ்திரேலியா, கனடாவில் உயர்கல்வி வாய்ப்பு; கோவையில் கல்வி கண்காட்சி
ஆஸ்திரேலியா, கனடாவில் உயர்கல்வி வாய்ப்பு; கோவையில் கல்வி கண்காட்சி
UPDATED : டிச 31, 2023 12:00 AM
ADDED : டிச 31, 2023 08:19 PM
சென்னை:
ஆஸ்திரேலியா, கனடாவில் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த கல்விக் கண்காட்சி, கோவையில் வரும் ஜனவரி 8ல் நடக்க உள்ளது.சர்வதேச கல்வி சேவைகளில் முன்னணி நிறுவனமான ஐ.டி.பி., வரும் ஜனவரி 8ம் தேதி, கோவையில் சர்வதேச கல்வி கண்காட்சியை நடத்துகிறது. கோவை ரேடிசன் புளு ஹோட்டலில் காலை 11:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை நடக்கும் இந்த கல்வி கண்காட்சியில், 40க்கும் மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த பல்கலைகள், கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.ஆஸ்திரேலியா, கனடாவில் படிக்க விரும்பும் மாணவர்களும், அவர்களது பெற்றோரும், பல்கலை பிரதிநிதிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். நிபுணர்களிடம் தனிப்பட்ட ஆலோசனைகளையும் பெற, இந்த கண்காட்சி உதவும்.என்னென்ன படிப்புகள் உள்ளன; பல்கலை தேர்வுகள், இன்டர்ன்ஷிப், கல்வி கடன்கள், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட, கல்வி தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும், மாணவர்கள் நேரடியாக விளக்கம் பெற முடியும்.இது தொடர்பாக, ஐ.டி.பி., நிறுவனத்தின் தெற்காசிய இயக்குனர் பியுஷ் குமார் கூறியதாவது:
வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் அதிகமுள்ள நகரமாக கோவை உள்ளது. சர்வதேச கல்வியை விரும்பும் மாணவர்களுக்கு, அனைத்து வகைகளிலும் ஐ.டி.பி., கல்வி கண்காட்சி ஆதரவை வழங்கும்.மாணவர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைத்து, வெளிநாடுகளில் கல்வி கற்பதை எளிதாக்குவதை, ஐ.டி.பி., லட்சியமாக கொண்டுள்ளது. கல்வி கண்காட்சியில், அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

